பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரேஷன் கடைகளில் டோக்கன் வினியோகம் தமிழக அரசு தகவல்




பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரேஷன் கடைகளில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

ஆணையர் கடிதம்

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, துணிப்பை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 3-ந் தேதியில் இருந்து இந்த பொருட்களை வழங்கலாம் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த உத்தரவை செயல்படுத்துவதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளுக்கும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

21 பொருட்கள்

21 பொருட்களை கொண்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு 2 கோடியே 15 லட்சத்து 29 ஆயிரத்து 114 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும்; 18 ஆயிரத்து 946 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கும் வழங்கப்பட வேண்டும்.

இவற்றை உரிய முறையில் வினியோகம் செய்ய வேண்டிய முழுப்பொறுப்பும் மாவட்ட கலெக்டர்களையே சாரும். பரிசுத்தொகுப்பு வினியோக பணி தொடங்கும் நாள் பற்றிய அரசின் அறிவுரை வந்ததும் தனியே தெரிவிக்கப்படும்.

சுழற்சி முறையில்....

ஜனவரி 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 15-ந் தேதி (சனிக்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் கடைகளில் குவிந்து விடுவதை தவிர்க்கவும், கொரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வசதியாகவும், தெருவாரியாக சுழற்சி முறையில் 150 முதல் 200 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

டோக்கன்

அதை அவர்களுக்கு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கனை முன்கூட்டியே வழங்க வேண்டும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அவர்களின் ஒப்புதலை பெற வேண்டும்.

யாரும் விடுபட்டுவிடக்கூடாது. எந்த சிரமமும் இல்லாமல் ரேஷன் கடைகளில் மக்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும். ரேஷன் அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ள உறுப்பினர் யாரும் கடைக்கு வந்து பரிசுத் தொகுப்பை பெறலாம்.

வரிசையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வரிசையில் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் நிற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments