மனு மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கூண்டோடு வெளிநடப்பு செய்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்!



மீமிசல் அருகே உள்ள நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மீதான விசாரணை குறித்து நடவடிக்கை வேண்டி ஊராட்சிமன்ற கூட்டத்தில் இருந்து அனைத்து வார்டு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று 8.12.2021 புதன்கிழமை காலை 11 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி தலைமையிலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் மேற்பார்வையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே உள்ள நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கோபாலப்பட்டிணம், கணபதிப்பட்டிணம், குறிச்சிவயல், முத்துக்குடா(மீனவர்), நாட்டாணி, ஆர்.புதுப்பட்டிணம்(மீனவர்), ஆர்.புதுப்பட்டிணம்(முஸ்லிம்), முத்துக்குடா(முஸ்லிம்), அண்டியப்பன்காடு, கூடலூர், பாதரக்குடி, புரசகுடி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது. இந்த ஊராட்சியில் சீதாலெட்சுமி என்பவர் தலைவராக உள்ளார். மேலும் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். 

இந்த ஊராட்சியில் டிசம்பர் மாதத்திற்கான ஊராட்சி மன்ற கூட்டம் காலை 11 மணியளவில் தொடங்கிய நிலையில் கடந்த 22.11.2021 அன்று மாவட்ட ஆட்சியரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்திருந்தனர். அதனடிப்படையில் கடந்த 1.12.2021 அன்று புதுக்கோட்டை மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) முன்னிலையில் வார்டு உறுப்பினர்கள் மனு மீதான விசாரணையை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேற்கொண்டார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில் மேற்பார்வையாளராக கலந்து கொண்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 1.12.2021 அன்று நடத்தப்பட்ட விசாரணையின் மீது அதிகாரிகள் என்னவிதமான நடவடிக்கைகள் மேற்கொண்டனர் என வார்டு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்கள். அதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத அதிகாரியை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கடந்த 1.12.2021 அன்று விசாரணை மேற்கொண்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வார்டு உறுப்பினர்கள் கூறுகையில் விசாரணையின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை வெளிநடப்பு செய்ய உள்ளோம் என தெரிவித்தனர். 

தகவல்: அபுதாஹீர், 3-வது வார்டு உறுப்பினர், கோபாலப்பட்டிணம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments