எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!



சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளான கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளில் இருந்து 350 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அதில் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து பிரதீப் (வயது 28) என்பவருக்கு சொந்தமான படகில் அவரும், அவரது தந்தை செல்வம் செட்டி(56), அருண் (23), சந்தோஷ் (22), வீரபாண்டியன் (22), சஞ்சய் (19) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 7 பேரும், வாசு (45) என்பவருக்கு சொந்தமான படகில் இருளப்பன் (33), ராஜா (43), அய்யனார் (42), விஜயேந்திரன் (43), ராம்குமார் (31), மணிகண்டன் (30) என மொத்தம் 13 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 13 மீனவர்களையும் சிறை பிடித்து இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவர்களது 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை படகுடன் கடலில் மூழ்கடித்து கொலை செய்தனர். பின்னர் கடந்த மாதம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ராஜ்கிரண் என்ற மீனவரை படகுடன் கடலில் மூழ்கடித்து கொலை செய்தனர்.

தற்போது ராமேசுவரம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது, கண்டனத்துக்குரியது. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று (நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேருக்கு 4ந்தேதி வரை சிறை தண்டனை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments