மருத்துவ படிப்புக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நேரடியாக பெறப்படுகிறது: மருத்துவ கல்வி இயக்ககம் ஏற்பாடு!



மருத்துவ படிப்பில் சேருவதற்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரடியாக பெறுவதற்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்வி இயக்ககம் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நேற்று முன்தினம் (19-ந்தேதி) முதல் ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2022 ஜனவரி, 7-ந்தேதி மாலை 5 மணி வரை என வரையறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதனை தேர்வுக்குழு செயலாளர், எண்.162, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு ஜனவரி 10-ந்தேதி மாலை 5 மணிக்குள் தபால் மூலமாகவோ, கூரியர் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வந்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நேரடியாக வந்து விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு ஏதுவாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு விண்ணப்பங்களை தனித்தனியாக பெறும் வகையில் 2 பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அவற்றை தீர்த்து வைப்பதற்காக உதவி மேஜை போடப்பட்டு, அதில் பணியாளர் ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை முதலே மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு நேரில் வருகை தந்து பூர்த்தி செய்த தங்கள் விண்ணப்பங்களை இந்த பெட்டிகளில் போட்டு வருகின்றனர். வருகிற ஜனவரி மாதம் 10-ந்தேதி மாலை 5 மணி வரை இந்த பெட்டிகள் அங்கு வைக்கப்பட்டு இருக்கும். மருத்துவபடிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பப்பதிவு தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 044-29862046, 29862045 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் 9884224648, 9884224649, 9884224745, 9884224746 என்ற செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே கலந்தாய்வுக்கு அனுமதியா?

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு மற்றும் கலந்தாய்வு குறித்த வழிகாட்டுதல்களை மருத்துவ கல்வி இயக்ககம் ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறது. அதில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் கலந்தாய்வு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகள் இடம்பெற்று இருக்கின்றன.

அந்த வகையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த அறிவுறுத்தல் விண்ணப்பதாரர்கள் பலருக்கு கேள்வியை எழுப்பி உள்ளது. அந்தவகையில் 18 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், கலந்தாய்வில் கலந்து கொள்ள இருப்பவர்களில் 18 வயதை பூர்த்தி செய்யாத விண்ணப்பதாரர்களும் (மாணவ - மாணவிகள்) இருக்கும்போது தடுப்பூசி எப்படி செலுத்த முடியும்? என்றும் கேட்டு இருக்கின்றனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்வி இயக்ககத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘தற்போது அரசு அறிவித்துள்ளபடி 18 வயதை பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்கவேண்டும். மத்திய அரசு 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. கலந்தாய்வு நடத்துவதற்குள் அதற்கான அறிவிப்பு வந்தால், 18 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களும் தடுப்பூசி செலுத்தவேண்டும். கலந்தாய்வு நடப்பதற்குள் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிக்கான அனுமதி வராவிட்டால் அவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள எந்த தடையும் இல்லை. இந்த அறிவுறுத்தல் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இணைக்கப்பட்டு இருக்கிறது' என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments