தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு +2 தேர்வு கட்டணம் இல்லை: தமிழக அரசு





தமிழகத்தில், தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு +2 தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து ஜனவரி 20-க்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும். பிளஸ் 2 தேர்வில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.

அதேபோல், பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் , வாய் பேச முடியாதவர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் எம்.பி.சி, பட்டியல் இன மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. பெற்றோர் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான பி.சி. மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதே நேரம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் உண்டு. மேலும், சுயநிதி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுதேர்வு எழுத உள்ள மாணவர்களிடமிருந்து தேர்வுக்குரிய கட்டணத்தை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் வசூலித்து அரசு தேர்வுகள் துறைக்கு செலுத்த வேண்டும் என அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் செய்முறை கொண்ட தேர்வுகளுக்கு 225 ரூபாயும் செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும்

நாளை முதல் 20ம் தேதி வரை தேர்வு கட்டணத்தை வசூலிக்க பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட வேண்டும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments