மணமேல்குடி அருகே பத்தகாடு பகுதி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரில் தத்தளிக்கும் மக்கள்! மணமேல்குடி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை!!



மணமேல்குடி அருகே பத்தகாடு பகுதி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். மழைநீரை வெளியேற்றி சாலையை சீரமைத்து தர வேண்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், மணமேல்குடி ஊராட்சியை சேர்ந்த ஸ்ரீ விஜய் மருத்துவமனை எதிரில் உள்ள பத்தகாடு பகுதியில் உள்ள சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.இங்கு மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் பெருமளவு குளம் போல தேங்கி நிற்கின்றது. இந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்துடன் இந்த பகுதியை கடந்து வருகின்றனர். குறிப்பாக மழை நேரத்தில் சொல்லவே வேண்டியதில்லை, இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மணமேல்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இப்பகுதியில் வடிகால் வசதி இல்லாததாலும், சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது.

மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுகள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் கூறுகையில், மழை பெய்தால் எங்கள் பகுதி நதி போல் காட்சியளிப்பதாகவும், இதனால் இப்பகுதியை நாங்கள் நீந்தி தான் செல்ல வேண்டி இருப்பதாகவும், பள்ளிக்கூடத்திற்கு செல்லக்கூடிய குழந்தைகள் பள்ளத்தில் விழுந்து எந்திரிச்சு செல்லக்கூடிய நிலை உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் சாலையோரங்களில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். குண்டும், குழியுமான சாலையை போர்க்கால அடிப்படையில் கிராவல் கொண்டு செப்பனிட வேண்டும் எனவும், மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தாமல் உடனடியாக போர்க்கால அடிப்படையில் குளம் போல் தேங்கி நிற்கும் சாலையை சீரமைக்க கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல்: ஜாபர் அலி உலவி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments