வீட்டு வாசலுக்கு வரும் குப்பை வண்டி: கோபாலப்பட்டிணம் மக்களே! பொது இடங்களில் குப்பைகளை கொட்டாதீர்!! ஜமாத்தார்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்!!!



கிழக்கு கடற்கரை சாலை (ECR) பகுதியில் இயற்கை மற்றும் சுகாதாரம் சூழ்ந்த எழில்மிகு அழகிய கிராமமாக கோபாலப்பட்டிணம் காட்சியளித்து வந்த நிலையில் சில மாதங்களாக குப்பை மற்றும் கழிவுநீர் சூழ்ந்து சுகாதாரமற்ற நிலையில் காட்சியளித்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்ற நிலையில் காட்சியளித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது நாம் தான் என்பதை மக்கள் அனைவரும் உணர்ந்து செயல்படும் படி ஊர் ஜமாத், ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் GPM மீடியா சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுக்குளம் பகுதியில் உள்ள குப்பை மேட்டையும் 
மற்றும் கல்லுக்குளம் பகுதியில் உள்ள குப்பை மேட்டையும் சோலை வனமாக மாற்ற இளைஞர்கள்‌, சமூக ஆர்வலர்களின் முயற்சியால் இன்று அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.இதனால் அந்த இடம் சுத்தமாக காணப்படுவது மட்டுமல்லாது, சுகாதாரமான நிலையில் உள்ளது.


மேலும் பெரிய பள்ளிவாசல் அருகில் பழைய குளத்தில் பொதுமக்கள் தற்பொழுது வரை குப்பைகளை கொட்டி வருகின்றனர்.அதே போன்று ஊற்றுக்கு செல்லும் வழியில் அண்மையில் சுத்தம் செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தற்பொழுது சுகாதாரமற்ற நிலையில் காட்சியளித்து வருகிறது. எனவே அந்த பகுதி மக்கள் தயவு செய்து அங்கு குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து தினந்தோறும் வீட்டு வாசலுக்கு வரும்  குப்பை வண்டி தூய்மை பணியாளரிடம் குப்பைகளை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அதனடிப்படையில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டி வந்த தாய்மார்கள், தந்தைமார்கள், சகோதரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று கொட்டக் கூடிய அண்ணன்மார்கள், தம்பிமார்களே தயவு செய்து பொது இடங்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம். நமது பகுதியை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க முடியும் என்ற உயர்ந்த நோக்குடன் பொதுமக்களாகிய நாம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு நமது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

நமதூரை சேர்ந்த வெளிநாடு‌ வாழ், வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

அன்பான தாய்மார்களே.... 
உங்கள் வீட்டில் சேரும் குப்பை மற்றும் கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவதை தவிர்த்து, தினந்தோறும் உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் குப்பை வண்டிகளில் கொடுத்து நாம் வசிக்கும் பகுதியை சுகாதாரமாக வைத்து கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு ஊர் ஜமாத், ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் GPM மீடியா சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நம்முடைய பகுதியை நாம்தான் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும் ஆகவே ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம்.

குறிப்பு: உங்கள் பகுதிக்கு குப்பை வண்டி வரவில்லையென்றால் வார்டு உறுப்பினர்கள் அல்லது ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்...

அவ்வாறு தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களுடைய GPM மீடியா வாட்ஸ்ஆப் நம்பருக்கு https://wa.me/918270282723 உங்கள் வீட்டின் வெளியே குப்பைகளை வைத்து புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்...

மாற்றம் ஒன்றே மாறாதது... ஆகவே முதலில் நம்மிடமிருந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்.. நமதூரை சுத்தமாக வைத்திருப்போம்...








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments