வாட்ஸ்அப் அட்மினுக்கு அதிகாரம் உண்டு... வாட்ஸ்அப் புதிய அப்டேட்






வாட்ஸ்அப் (Whatsapp) குழு அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் வெளியிடவுள்ளது.

பொதுவாகவே உலகளவில் அனைவராலும் அதிகம் விரும்பி பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்அப் (Whatsapp) ஆகும். இது அனைவருக்கும் அணுகுவதற்கு எளிதாக உள்ளதால், இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய தனியுரிமை கொள்கைகளை வாட்ஸ்அப் வகுத்திருந்தாலும், அதை பயனர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை. மெட்டா நிறுவனமும் தனது வாட்ஸ்அப் பயனர்களுக்கென அவர்களை கவரும் விதமாக பல அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது.

தற்போது, பயனர் அனுபவத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குழு உரையாடல்களில் அனுப்பப்படும் செய்திகளை, அக்குழுவில் அனைவருக்கும் தெரியாதபடி நீக்க அதன் நிர்வாகிக்கு (admin) அதிகாரம் வழங்கும் வசதி விரைவில் அறிமுகமாகலாம் எனக் கூறப்படுகிறது. அப்படி ஒரு செய்தி அழிக்கப்பட்டபின், ‘இது குழு நிர்வாகியால் நீக்கப்பட்டது’ எனத் திரையில் ஒரு குறிப்பு தோன்றும்.

வாட்ஸ்அப் புதிய அப்டேட் (Whatsapp new update)

பொதுவாக வாட்ஸ்அப் குழுவில் அதில் இணைந்திருக்கும் அனைவரும் பதிவிட சில அட்மின்கள் அனுமதி அளித்திருப்பர். இப்படி கொடுக்கப்பட்ட அனுமதியை சிலர் தவறுதலாகப் பயன்படுத்துவதுண்டு. தேவையற்ற பதிவுகளை எந்நேரமும் குழுவில் பதிவிட்டு வருவர். குறிப்பாக பார்வேட் மெசேஜுகளை அதிகம் பகிர்வர். இது குழு தொடங்கப்பட்ட நோக்கத்தையே சிதைத்துவிடும். அட்மின்களுக்கும் இந்த விவகாரம் பெரும் தொல்லையாக இருந்து வந்தது. அதனை நீக்கவும் அவர்களால் முடியாமல் இருந்தது.

சில நேரங்களில் போலி செய்திகளை குழு உறுப்பினர் பகிர்ந்ததற்கு, அட்மின் பொறுப்பேற்க வேண்டிய சூழல் இருந்தது. இதனைப் புரிந்து கொண்ட வாட்ஸ்அப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அப்டேட்டை விரைவில் வெளியிடவுள்ளது. இதன்படி தேவையற்ற பதிவுகளை அட்மின் நீக்க புதிய அப்டேட் அனுமதிக்கிறது. தற்போது, இந்த அம்சம் சில பீட்டா பயனர்களின் செயலிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப் பீட்டா இன்போ தகவல்

வாட்ஸ்அப்பில் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ (Delete for Everyone) வசதியும் மேம்படுத்தப் படவுள்ளதாக வாட்ஸ்அப் பீட்டா இன்போ (Whatsapp beta info) அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தது. இப்போது, ஒருவர் செய்தி அனுப்பிய ஒரு மணி எட்டு நிமிடம் ஏழு நொடிகளுக்குள் எவரும் பார்க்க முடியாமல் அதனை நீக்கிவிடலாம். இந்நிலையில், அந்தக் கால அவகாசத்தை ஏழு நாள்கள் எட்டு நிமிடங்களாக நீட்டிக்க வாட்ஸ்அப் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஒருமுறை மட்டுமே கிடைக்கப்பெற்ற செய்தியை பயனர் பார்க்க முடியும் என்ற அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிட்டது. பயனர்களின் தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்ற பாதுகாப்பு சார்ந்த அப்டேட்டுகள் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பல பாதுகாப்பு அம்சங்களை மெட்டா நிறுவனம், தங்கள் வாட்ஸ்அப் செயலியில் புதுப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments