போர் பதற்றம் எதிரொலி: உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர அதிக விமானங்கள் மத்திய அரசு ஆலோசனை




போர் பதற்றம் நீடித்து வரும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வர அதிக விமானங்களை இயக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளியேற அறிவுறுத்தல்

உக்ரைன் மீது படையெடுக்க திட்டமிட்டு படைகளை குவித்து வரும் ரஷியாவால் உக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகளும் களமிறங்க திட்டமிட்டு உள்ளதால் மிகப்பெரிய போர் வெடிக்கும் அபாயம் உள்ளது.

இந்த பதற்றமான சூழலில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்கள் வெளியேறுமாறும், மற்றவர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து, கல்வி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இதில் முதற்கட்டமாக விமான போக்குவரத்தை அதிகரிக்க ஆலோசனை நடத்தி வருகிறது.

விமான நிறுவனங்களுடன் ஆலோசனை

அந்தவகையில் இந்தியா-உக்ரைன் இடையே அதிக விமானங்களை இயக்குவது தொடர்பாக பல்வேறு விமான நிறுவனங்களுடன், மத்திய சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பல இந்திய மாணவர்கள் தற்போது உக்ரைனில் இருப்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் நாடு திரும்புவதை குறித்தும், இதற்காக விமானங்களைப் பெறுவது பற்றியும் மாணவர்களின் குடும்பங்கள் கவலையாக உள்ளன. எனவே இதற்காக விமான போக்குவரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது’ என தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு மையம்

மேலும் உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள தலைநகர் கீவில் இயங்கி வரும் இந்திய தூதரகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதைப்போல அவர்களது குடும்பத்தினர், தங்கள் உறவினர்களின் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

தொடர்பு எண்கள் வெளியீடு

இதை உறுதிசெய்துள்ள வெளியுறவு அமைச்சகம், இந்த கட்டுப்பாட்டு அறைகளுக்கான தொடர்பு எண்களையும் வெளியிட்டு உள்ளது. அதன்படி டெல்லியில் அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறையை +91 11 23012113, +91 11 23014104, +91 11 23017905 என்ற எண்களில் தொடர்பு கொண்டு உக்ரைனில் உள்ள தங்கள் உறவுகளை பற்றிய விவரங்களை கேட்டறியலாம். மேலும் situationroom@mea.gov.in. என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இதைப்போல உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தில் இயங்கி வரும் உதவி மையத்தை +380 997300428, +380 997300483 என்ற தொலைபேசி எண்களிலும், cons1.kyiv@mea.gov.in என்ற இ-மெயில் முகவரி மூலமும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த 2020-ம் ஆண்டு நிலவரப்படி உக்ரைனில் சுமார் 18 ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக மத்திய அரசின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனினும் பெருந்தொற்று காரணமாக இந்த எண்ணிக்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும் கருதப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments