இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் உள்பட 47 பேர் தமிழகம் வந்தனர்




இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் உள்பட 47 பேர் தமிழகம் வந்தனர் உணவு, தண்ணீர் வழங்கவில்லை என போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
 
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் உள்பட 47 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள் உணவு, தண்ணீர் வழங்கவில்லை என விமான நிலையத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

சிறைபிடிப்பு

ராமசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்கச் சென்ற 6 விசைப்படகுகள் மற்றும் 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட 56 மீனவர்களும் கடந்த மாதம் 25 -ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். மீதம் உள்ள மீனவர்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

விமான நிலையத்தில் போராட்டம்

இந்த நிலையில் கொழும்புவில் இருந்து, 47 மீனவர்களும் நேற்று விமானம் மூலம் புறப்பட்டு காலை 7 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்திறங்கினர். ஆனால் அவர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி செய்து தரவில்லை என கூறி சென்னை விமான நிலையத்தில் மீனவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் மீனவர்கள் சாப்பிட பண உதவி வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் வேனில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

முன்னதாக மீனவர்கள் கூறியதாவது:-

ஒத்துழைக்கவில்லை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாங்கள், ஜனவரி 25-ந் தேதி விடுதலை செய்யப்பட்டோம். ஆனால் இந்திய தூதரக அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டோம். பின்னர் கொரோனா தொற்று இருப்பதாக கூறி எங்களை தனிமைப்படுத்தினர். ஆனால் அதற்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை.

இதனால் நாங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். அதன்பிறகுதான் இந்திய தூதரக அதிகாரிகள் வந்து எங்களை தமிழகம் அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் எங்களது படகுகளை மீட்டுத்தர வேண்டும்.

அங்கிருந்து ராமேசுவரம் மீனவர்கள் 37 பேரும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் சேர்ந்த மீனவர்கள் 10 பேரும் மீன்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இலங்கை சிறையில் இன்னும் நாகை மற்றும் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 44 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments