இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 19 பேர் அகதிகளாக வருகை




இலங்கையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 பிளாஸ்டிக் படகுகள் மூலம் 19 பேர்அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அனைத்து பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்து விட்டதாலும், அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாலும் பொதுமக்கள் அங்கு சரியான உணவு கிடைக்காமல் கடுமையான கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக இதுவரை இலங்கையில் இருந்து 20 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை மன்னார் பேசாலை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு பிளாஸ்டிக் படகில் புறப்பட்ட 10 அகதிகளை நள்ளிரவில் தனுஷ்கோடி அருகே முதலாவது மணல்திட்டு பகுதியில் படகோட்டிகள் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை அந்த வழியாக மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மணல்திட்டு பகுதியில் அகதிகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

9 அகதிகள்

அதை தொடர்ந்து ராமேசுவரம் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் உள்ளிட்ட கடலோர போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு மீன்பிடி படகில் ஏற்றி அரிச்சல்முனை கடற்கரையில் வந்து இறக்கி அதன் பின்னர் வாகனம் மூலம் மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதேபோல் இலங்கையில் இருந்து மற்றொரு பிளாஸ்டிக் படகில் வந்த 9 அகதிகள் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் வந்திறங்கி அங்கிருந்து சாலைக்கு நடந்து வந்து அதன் பின்னர் வாகனம் மூலம் மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு நேரடியாகவே வந்தனர்.

நேற்று ஒரே நாளில் இலங்கையில் இருந்து 2 பிளாஸ்டிக் படகுகளில் 5 குடும்பத்தை சேர்ந்த 7 ஆண்கள், 7 பெண்கள், 4 ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை என மொத்தம் 19 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

விசாரணை

இலங்கையில் இருந்து வந்த அகதிகளிடம் மத்திய-மாநில உளவு பிரிவு மற்றும் கியூ பிரிவு உள்ளிட்ட போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அகதிகள் அனைவருமே இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத சூழ்நிலையாலும் வேலைவாய்ப்புகள் இல்லாததாலும் உயிர் வாழ்வதற்காகவே படகு மூலம் தமிழகம் தப்பி வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments