சார்-பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும் - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி




தமிழக சட்டப்பேரவையில் இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பல்வேறு கேள்விகளுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிலுரை அளித்தார்.


அவர் கூறியதாவது:-

“அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார்-பதிவாளர் அலுவலகம் செயல்படும். பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும்.

வணிக வரி மற்றும் பதிவுத்துறைகள் அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. கடந்த ஆண்டுகளை விட வணிக வரித் துறையில் வருவாய் அதிகரித்துள்ளது.

பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள், தவறான ஆவணப் பதிவுகளை கண்டறிந்து சரி செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. போலி பட்டியல் தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“எனது விலைப் பட்டியல் எனது உரிமை" என்ற திட்டம் செயல்படுத்தப்படும். வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள ஜிஎஸ்டி மென்பொருள் வாங்கி பயன்படுத்தப்படும்.

திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்ய இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

“அவசர ஆவண பதிவிற்காக, பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படும்.தட்கல் முறையில் ரூ.5 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும். முதல் கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

பதிவு செய்யப்பட்ட திருமண சான்றுகளை இணையம் வழியாக விண்ணப்பித்து திருத்தம் செய்யும் வசதி ரூ.60 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

சென்னை மற்றும் மதுரையில் இரண்டு பதிவு மண்டலங்கள் உருவாக்கப்படும்.சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை மையமாக வைத்து கூடுதலாக ஒரு புதிய மண்டலம் அமைக்கப்படும்.

பதிவுத்துறையில் கட்டிடக்கலை பணி மேற்கொள்வதற்காக பொறியியல் பட்டதாரிகளுக்கு “களப்பணி மேற்பார்வையாளர் உரிமம்” வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும். சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை மட்டும் ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படும்.” 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், அரசின் முயற்சி காரணமாக 36 ஆயிரத்து 952 வணிகர்கள் புதிதாக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர் என வணிகவரித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments