மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற உபகரணங்களை தர மறுப்பதாக குற்றச்சாட்டு வீரர், வீராங்கனைகள் சாலை மறியல்




மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற உபகரணங்களை தர மறுப்பதாக குற்றம்சாட்டிய வீரர், வீராங்கனைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விளையாட்டு மைதானம்

புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இதில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவது வழக்கம். மேலும் விளையாட்டு விடுதி மாணவ-மாணவிகளும் பயிற்சி பெறுவார்கள். இதில் கிளப்போல் அமைத்து வீரர்களுக்கு பயிற்சி அளிப்பவர்களும், மைதானத்தில் பயிற்சி அளிப்பது உண்டு. இவ்வாறு பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் விளையாட்டு மைதான அலுவலகத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துவது உண்டு.

இந்த நிலையில் தற்போது உபகரணங்கள் எதுவும் தர மறுப்பதாக விளையாட்டு வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தடகள பயிற்சியில் தொடர் ஓட்டத்திற்கான ஸ்டிக் ஒன்றை வீரர், வீராங்கனைகள் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு உபகரணத்தை அங்கிருந்தவர்கள் தர மறுத்துள்ளனர். இது தொடர்கதையாக இருந்துள்ளதால் வீரர், வீராங்கனைகள் ஆவேசமடைந்து மைதானத்தின் வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பிரிவு போலீசார், டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கலெக்டரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பின் வீரர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது. இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறுகையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வழங்கப்பட்ட உபகரணங்களை பயன்படுத்த அனைவருக்கும் அனுமதி அளிப்பது உண்டு. ஆனால் 2 கிளப்பை சேர்ந்த வீரர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது என்றனர். மேலும் கலெக்டரிடம் இதுதொடர்பாக புகார் அளிக்க இருப்பதாக கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments