புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி 25-ந் தேதி தொடக்கம்




புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராம கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (வருடம்) இறுதி மாதத்தில் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை கலெக்டர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று, நடப்பு பசலி (1431) ஆண்டுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி வருகிற 25-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. கறம்பக்குடி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 25-ந் தேதி மழையூர் உள்வட்டத்திற்கும், 26-ந் தேதி கறம்பக்குடி உள்வட்டத்திற்கும் கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற உள்ளது. இதேபோல அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணிக்கு ஜமாபந்தி தொடங்கி நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் அதிக நபர்கள் கூடுவதை தவிர்த்தல், சமூக இடைவெளியை பேணுதல், முககவசம் அணிதல் மற்றும் கைகளை கழுவுதல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜமாபந்தியும், அதனை தொடர்ந்து குடிமக்கள் கூட்டமும் நடைபெறும். எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து பயன்பெறுமாறு கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments