திருச்சி அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் அறுவை சிகிச்சை டாக்டர்கள் குழுவினருக்கு டீன் பாராட்டு




திருச்சி அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர்கள் குழுவினருக்கு டீன் பாராட்டு தெரிவித்தார்.

சிறுவனுக்கு அறுவை சிகிச்சை

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வலது மூட்டில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி அரசு பொதுமருத்துவமனை எலும்பு முறிவு துறையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதித்தனர்.

அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, தொடை எலும்பில் கட்டி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருடைய தொடை எலும்பில் 15 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 15 சென்டிமீட்டர் அகலம் உடைய ஆஸ்டியோ சார்கோமா என்ற புற்றுநோய் கட்டி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

24 மணிநேரம் கண்காணிப்பு

இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை துறை தலைவர் டாக்டர் கல்யாணசுந்தரம் மேற்பார்வையில் டாக்டர் வசந்தராமன் தலைமையில், டாக்டர்கள் ரமேஷ் பிரபு, ராபர்ட், கோகுலகிருஷ்ணன் ஆகியோருடன் புற்றுநோய் அறுவை சிகிச்சை டாக்டர் செந்தில்குமார், மயக்கவியல் துறை சிவக்குமார் ஆகியோர் தொடர்ந்து 6 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அப்போது எலும்பு புற்றுநோய் கட்டியை அகற்றி, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயற்கை மூட்டு உபகரணத்தை உட்பொருத்தினர்.இதனால் சிறுவனுக்கு கால் துண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டதுடன் முழு செயல்திறனும் இயல்புபோலவே மீட்கப்பட்டது. சிறுவனுக்கு 4 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டது. 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பு கிடைக்கும் வகையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

டாக்டர்கள் குழுவினருக்கு பாராட்டு

இது குறித்து அரசு மருத்துவமனை டீன் வனிதா மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் நிருபர்களிடம் கூறும்போது, பொதுவாக இந்த வகையான எலும்பு புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டால் சென்னை போன்ற உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை உள்ள ஊர்களுக்கு தான் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைப்பார்கள். மேலும் தொடைப்பகுதியுடன் கால் துண்டித்தல் அறுவை சிகிச்சை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் முதன்முறையாக இதுபோன்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments