கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை எடுத்து சென்று அசத்திய இஸ்லாமியர்கள்




    நெடுவாசலில் உள்ள மங்களநாயகி அம்பாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை எடுத்து சென்று இஸ்லாமியர்கள் அசத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே நெடுவாசல் கிராமத்தில் பழமை வாய்ந்த மங்களநாயகி அம்பாள் உடனுறை பாலாண்ட ஈஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நாடியம்மன் உள்ளிட்ட பரிவார சன்னதிகளும் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.



இந்த விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை-தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் உள்ள பல்வேறு கிராமமக்கள் நாட்டியக் குதிரை ஆட்டங்கள், செண்டை மேளங்கள் முழங்க கண்கவர் வாணவேடிக்கையுடன் நெடுவாசல் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

இஸ்லாமியர்கள் சீர்வரிசை

இந்நிலையில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஆவணம் மற்றும் காசிம்புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தட்டுகளை கையில் ஏந்தியபடி நெடுவாசல் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.



அவர்களை நெடுவாசல் கிராமமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சார்பில் மாலை அணிவித்து வரவேற்று இஸ்லாமியர்களை கோவிலுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் இஸ்லாமியர்கள் கொண்டு வந்த சீர்வரிசை பொருட்கள் மற்றும் பணத்தை விழாக்குழுவினர் பெற்றுக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

உறவினர்களாக பழகி....

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக இப்பகுதி கிராமங்களில் உள்ள இந்து கோவில்களின் திருவிழாவின் போது இஸ்லாமியர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும், அதேபோல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் பெரு நாட்களுக்கு இந்துக்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதும் பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது. மதங்களை கடந்து மனித நேயத்தை தங்கள் பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போற்றி வருகின்றனர். புதுக்கோட்டை-தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களை பொறுத்தவரையில் இந்து-முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி ஒவ்வொரு கிராமத்தினரும் உறவினர்களாக மதங்களை கடந்து மனித நேயத்தோடு அனைவரும் பழகி வருவதாகவும் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments