கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்




    மானிய விலையில் டீசல் வழங்காத அதிகாரிகளை கண்டித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் அரசு தரும் மானிய விலை டீசலை பெற்றுக்கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்க செல்வது வழக்கம். ஆனால் தற்போது மானிய விலை டீசல் தட்டுப்பாடு காரணமாக கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது:-

ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்களுக்கு மட்டும் மானிய விலை டீசல் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது. ஆனால் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலை டீசல் தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

வேலை நிறுத்தம்

மானிய விலையில் டீசல் கிடைக்காததால் கடலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைகிறது. இதனால் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலை டீசலை வழங்காத புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனரை கண்டித்தும், அரசு மானிய டீசல் விற்பனை நிலைய மேலாளரை கண்டித்தும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் கூறுகையில், வழக்கமாக ஒரு விசைப்படகுக்கு ஒரு மாதத்திற்கு 1,800 லிட்டர் மானிய விலையில் டீசல் வழங்கப்படும். தற்போது டீசல் தட்டுப்பாடு காரணமாக எங்களுக்கு போதிய அளவு டீசல் வரவில்லை. இதனால் மீனவர்களுக்கு டீசல் சரிவர வழங்க முடியவில்லை. இருப்பினும் மீனவர்களின் நலன் கருதி உயர் அதிகாரிகளிடம் பேசி டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments