புதுக்கோட்டையில் புத்தக திருவிழா தொடங்கியது






புதுக்கோட்டையில் தொடங்கிய புத்தக திருவிழா 7-ந் தேதி வரை நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் 5-வது புத்தக திருவிழா புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நேற்று தொடங்கியது.




விழாவுக்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பேசுகையில், புத்தக திருவிழாவில் ரூ.3 கோடி வரைக்கும் புத்தங்கள் விற்பனையாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து அரங்குகளில் புத்தகங்களை பார்வையிட்டார். மேலும் ரூ.1 லட்சத்திற்கு புத்தகங்களை வாங்கினார். 

அப்போது அவர் பேசுகையில், ''புத்தகம் வாசிப்பதின் மூலம் அறிவாற்றல், நினைவாற்றல் வளரும். மனதில் ஆழமான சிந்தனை பதியும். எனவே தினமும் ½ மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் நினைவாற்றல் வளரும்'' என்றார். புத்தக திருவிழா வருகிற 7-ந் தேதி வரை காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. 

தினமும் வெவ்வேறு கலைநிகழ்ச்சிகள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் பாலகிருஷ்ணன், நெல்லை எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடக்க விழாவில் சின்னத்துரை எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகராட்சி ஆணையர் நாகராஜன், புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் முத்துநிலவன், தங்கமூர்த்தி, ராஜ்குமார் மற்றும் விழாக்குழுவினர் கலந்துகொண்டனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments