கோபாலப்பட்டிணத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் முக்கிய சாலைகள்! ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!




கோபாலப்பட்டிணத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் பழைய காலனி, நடுத்தெரு, ஆலமரத்தில் இருந்து அரண்மனை தோப்பிற்கு (ஊற்று) செல்லும் சாலை மற்றும் கோபாலப்பட்டிணத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் எரியாத தெரு விளக்கினை சரி செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் கடற்கரை ஈத்கா மைதானம் வழியாக அரண்மனை தோப்பிற்கு செல்லும் சாலை, நடுத்தெரு, பழைய காலனியில் இருந்து அரண்மனை தோப்பிற்கு (ஊற்று) செல்லும் சாலை மற்றும் ஒரு சில இடங்களில் தெருவிளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியுள்ளது.

கடற்கரை ஈத்கா மைதானம்-தோப்பு சாலையில் உள்ள (ஈத்கா மைதானம் முதல் தோப்பு வளைவு வரை) சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு தெரு விளக்குகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எரியவில்லை. கடற்கரை-தோப்பு சாலையில் கலர் கம்பெனி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

மேலும் பெரியவர்கள், சிறியவர்கள் பள்ளிவாசல்களில் தொழுகையை முடித்துவிட்டு வீடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் அரண்மனை தோப்பில் உள்ள ஊற்றில் குடிதண்ணீர் எடுத்து செல்பவர்கள், அப்பகுதி வழியாக மீமிசல் சென்று வரக்கூடிய பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பலர் கீழே விழுந்து பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

கோபாலப்பட்டிணத்தில் இது போன்று பல இடங்களில் தெருவிளக்குகள் எரியாததால் இருளில் நடக்க மக்கள் பயப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் ஊற்று தண்ணீர் எடுத்து நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.

தற்போது உள்ள சூழலில் ஆங்காங்கு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்ற காலகட்டத்தில் இப்பகுதியில் தெருவிளக்கு இல்லாமல் இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் கூறியும் எரியாத மின் விளக்குகளை சரி செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

ஆகையால் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக பழைய காலனி, நடுத்தெரு, ஆலமரத்தில் இருந்து அரண்மனை தோப்பிற்கு (ஊற்று) செல்லும் சாலை மற்றும் கோபாலப்பட்டிணம் முழுவதும் ஒரு சில இடங்களில் எரியாத மின் விளக்குகள் சரி செய்து கொடுத்து கிராம மக்களின் நலனை காக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.







புகைப்பட உதவி: சுல்தான் அப்துல் காதர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments