பண்ணை குட்டைகளில் மீன் வளர்பு,மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன விவசாயத்திற்கு மானியம் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்






பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க மானியம்
விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாள்

பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 250 முதல் ஆயிரம் சதுர மீட்டர் அளவில் உள்ள பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பினை மேற்கொள்ள மீன்குஞ்சு, மீன் தீவனம், உரங்கள் பண்ணை பொருள்கள், பறவை தடுப்பு ஆகியவை ஒரு அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.36 ஆயிரத்தில் இருந்து 50 சதவீதம் மானியமாக ஒரு பண்ணை குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். 

மேற்கண்ட மானியம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்காணும் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை வருகிற 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மீன்வளத்துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன விவசாயத்திற்கு மானியம் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து 2022-23-ம் ஆண்டில் ரூ.12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்து தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021- 2022-ல் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பான குறு வட்டங்களில் உள்ள ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கும் 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3 லட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ரூ.75 ஆயிரமும், நீர் வினியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்பு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2½ லட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை, அறந்தாங்கியில் உள்ள வேளாண்மை துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments