ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு




ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டம்

தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது. ஒழுங்குபடுத்துவது குறித்த அவசியம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகக்கூடிய தீமையை பற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

குழுவின் அறிக்கை பரிசீலனை

வரைமுறையற்று ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது.

பல்வேறு நாடுகளில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தியோ அல்லது முற்றிலுமாக தடை செய்தோ சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. குழுவின் அறிக்கை அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.

கருத்து தெரிவிக்கலாம்

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்க விரும்புவோர், குறிப்பாக பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைய தலைமுறையினர், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துகளை கேட்க அரசு முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்க விரும்புவோர் தங்களது கருத்துகளை homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் வருகிற 12-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

நிறுவனங்களின் கருத்து

ஆன்லைன் விளையாட்டுகள் பற்றிய கருத்துகளை நேரடியாக தெரிவிக்க விரும்பும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க 9-ந் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது வேண்டுகோளை மேற்கூறிய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

கருத்து கேட்பு கூட்டம் 11-ந் தேதி மாலை 4 மணி முதல் நடைபெறும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கு பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments