தேசிய கொடி ஏற்றுவதில் சாதி பாகுபாடு பார்க்க கூடாது தமிழக அரசு அதிரடி உத்தரவு ‘உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களே கொடி ஏற்ற வேண்டும்’





தேசிய கொடி ஏற்றுவதில் சாதி பாகுபாடு பார்க்க கூடாது என்றும், உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

கிராமசபை கூட்டம்

இந்த நாளில் சுதந்திரத்துக்காக உழைத்த நம் முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து ஊராட்சி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றவும், கிராம ஊராட்சிகளில் தலைமை பொறுப்பு வகிக்கும் அனைத்து ஊராட்சி தலைவர்களும் முறையே தமது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

அதேபோல், சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடத்தப்பட இருக்கின்றன. இதில் கிராம சபை கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள் வெளியீடு, பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்கிற தலைப்புகளில் விவாதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த கிராம சபை கூட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது கடமை ஆகும். கிராம சபைகளில் கலந்து கொள்ளும் பொது மக்கள் உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சாதி பாகுபாடு கூடாது

உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் சாதி பாகுபாடு காரணமாக தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி அலுவலகங்களில் சாதி பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தண்டனைக்குரிய குற்றம்

சுதந்திர தின விழாவில் சென்னை தலைமை செயலகம் முதற்கொண்டு, கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைப்பது மரபாகும். ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசிய கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகளோ, தேசிய கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவுக்கூறு 17-ன்படி “தீண்டாமை” ஒழிக்கப்பட்டு அதன் எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. “தீண்டாமை” காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்

1989-ம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பிரிவு3 (1) (எம்)-ன்படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர், அலுவலக பணியில் உள்ளவர்கள் என எவரையும் அவர்களது அலுவலக பணிகளையும் மற்றும் கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும் மேற்சொன்ன சட்டத்தின் பிரிவு 3 (1) (ஆர்)-ன்படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் மேற்சொன்ன வகுப்பினரை வேண்டுமென்றே அவமதித்தால் அல்லது பொதுமக்கள் பார்வையில் எந்த இடத்திலும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டால் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனை கருத்தில்கொண்டு எதிர்வரும் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

அதுபோல, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்துகொள்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், போதுமான காவல் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்த புகார்களைக் கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண், ஒரு அலுவலரோ அறிவிக்கப்படலாம். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஓர் அறிக்கையினை அரசுக்கு 14.8.2022 மாலைக்குள் வந்து சேருமாறும், சுதந்திர தின விழா நிறைவுற்றதும், அதுகுறித்த அறிக்கையை 17.8.2022-க்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments