திருச்சி புதுக்கோட்டை சாலையில் களமாவூர் ரெயில்வே கேட் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 38 பேர் கைது




களமாவூர் ரெயில்வே கேட் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெயில்வே கேட்

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள களமாவூர் மேம்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இதையடுத்து, பாலத்துக்கு கீழே உள்ள ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை ரெயில்வே இருப்புபாதை பொறியாளர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். பின்னர் ரெயில்வே கேட்டின் இருபுறமும் மூடப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு மக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் செய்தனர்.

38 பேர் கைது

களமாவூர் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், விராலிமலை செல்லும் வழியில் உள்ள கிராமங்களுக்கு மேம்பாலம் உள்ள ½ கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி வந்து செல்ல வேண்டும். சாமி ஊர்வலம், இறுதி ஊர்வலம் மேம்பாலம் வழியே வரும்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாற்றுவழி ஏற்பாடு செய்துவிட்டு ரெயில்வே கேட்டை மூடுமாறு கோரிக்கை வைத்தனர்.



இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு சென்றிருந்த கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையிலான போலீசார் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments