8 மாதங்களாக 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து பிலாவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜினாமா பதிவு தபாலில் கடிதம் அனுப்பினார்




    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் பிலாவிடுதி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் விஜய ரவி பல்லவராயர் (வயது 60). இவர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவராகவும், கறம்பக்குடி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தின் நெருங்கிய உறவினரான இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 70 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று பிலாவிடுதி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தநிலையில் பிலாவிடுதி ஊராட்சியில் கடந்த 8 மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் விஜய ரவி பல்லவராயர் தனது பதவியை ராஜினாமா செய்து கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு பதிவு தபாலில் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்தும், மக்களுக்கு பயன் அளிக்காத பதவியில் தொடர விரும்பவில்லை எனவும் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி தமிழ்செல்வனிடம் கேட்டபோது, பிலாவிடுதி ஊராட்சி மன்ற தலைவரின் ராஜினாமா கடிதம் வந்திருப்பதாகவும், ஆனால் ராஜினாமா குறித்து ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது போன்ற வழிமுறைகளை பின்பற்றிய பின்னரே அவரது ராஜினாமாவை ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதற்கிடையே பிலாவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜினாமா செய்ய காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் சார்பில் நேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தாசில்தார் ராமசாமி தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments