புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 474 எக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு



புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 474 எக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு திருநாவுக்கரசர் எம்.பி. முன்னிலை வகித்தார்.

இத்திட்டத்தில் விராலிமலை தாலுகா குன்னத்தூர், குளத்தூர் தாலுகா புலியூர் மற்றும் வத்தனாக்குறிச்சி கிராமங்களில் நிலமெடுப்பு செய்வதினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இடமாற்றம் செய்யப்படவுள்ள 25 குடும்பங்கள் ஆகியவற்றிற்கான மறுவாழ்விற்காக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரால் சமர்பிக்கப்பட்ட இறுதி திட்ட வரைவு அறிக்கையினை பரிசீலனை செய்து மாநில மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர், நில நிர்வாக ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பும் பொருட்டு மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி-வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக விராலிமலை, குளத்தூர் மற்றும் புதுக்கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 474.83 எக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 150.60 எக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யப்படவுள்ளது. மேற்காண்ட திட்டத்திற்காக 19 கிராமங்களில் நில அளவை பணிகள் முடிவுற்று முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டப் படியும் மற்றும் தனி நபர் பேச்சுவார்த்தை மூலமும் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

அதன்படி இத்திட்டத்திற்காக தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் குன்னத்தூர், புலியூர், வத்தனாகுறிச்சி, வாலியம்பட்டி, சீமானூர் மற்றும் பூங்குடி ஆகிய வருவாய் கிராமங்களில் இதுவரை 6 கட்டங்களாக 43.19 எக்டேர் நிலங்கள் ரூ.44.15 கோடி மதிப்பிற்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக விராலிமலை தாலுகா, குன்னத்தூர் கிராமத்தில் நீர்வளத்துறை மூலம் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெறுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் சின்னத்துரை எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments