கருவேப்பிலான் ரெயில்வே கேட் பராமரிப்பு பணி: 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் அவதி




கருவேப்பிலான் ரெயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பராமரிப்பு பணி

புதுக்கோட்டை மாநகராட்சி எல்லைக்குள் திருவப்பூர் ரெயில்வே கேட் மற்றும் பாலன்நகர் அருகே உள்ள கருவேப்பிலான் ரெயில்வே கேட் அமைந்துள்ளன. தினசரி இந்த வழித்தடங்களில் 15-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கருவேப்பிலான் ரெயில்வே கேட்டில் தற்போது அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அந்த கேட் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுக்கோட்டை நகருக்குள் நுழையும் வாகனங்களும், நகரை விட்டு வெளியேறும் வாகனங்களும் திருவப்பூர் ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றன.

அணிவகுத்து நின்ற வாகனங்கள்

அனைத்து வாகனங்களும் ஒரே பாதையை நோக்கி திசை திருப்பப்பட்டதால், நேற்று காலையில் இருந்தே திருவப்பூர் பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இந்த சூழலில், அந்த வழியே ரெயில் ஒன்று செல்வதற்காக திருவப்பூர் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால், சாலையின் இருபுறமும் பஸ்கள், லாரிகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெயிலின் தாக்கத்திற்கு இடையே நீண்ட நேரமாக நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது.

பணிகளை தொடங்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 40 ஆண்டு காலமாக இந்த இரு இடங்களிலும் ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்பது மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

திருவப்பூர் மேம்பாலத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து, மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மாநில அரசு இந்த பணிகளை விரைந்து தொடங்கி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும், என்றனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments