ஜாக்கிரதை.. சார்ஜ் போடப்பட்ட செல்போன் வெடித்து 8 மாத குழந்தை பலி.. தொடரும் சோகம்




பரேலி: உத்தரபிரதேசத்தில் சார்ஜ் போடப்பட்ட செல்போன் வெடித்ததில் 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக செல்போன்கள் வெடிக்கும் நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த சம்பவங்களில் காயங்கள் ஏற்படுவதுடன் நின்றுவிடாமல் சில சமயங்களில் உயிரிழப்பும் நேரிடுகின்றன.

சாதாரண செல்போன்கள் என நாம் நினைப்பது பல நேரங்களில் நமக்கும், நமது குடும்பத்தினருக்கும் பெரும் ஆபத்தானதாக மாறிவிடுகிறது. அப்படியொரு சம்பவம்தான் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

செல்போனுக்கு சார்ஜ்
உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் சுனில் குமார் காஷ்யப். கூலித் தொழிலாளியான இவருக்கு குஷம் என்ற மனைவியும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றன. இதில் இரண்டாவது பெண் குழந்தைக்கு 8 மாதமே ஆகியிருந்தது. இதனிடையே, நேற்று சுனில்குமார் மதிய உணவு சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் குஷமும் தனது பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அவர்களை ஒரு அறையில் தூங்க வைத்தார். அப்போது தனது ஸ்மார்ட்போனை அவர் சார்ஜ் செய்துள்ளார். அந்த செல்போனுக்கு பக்கத்தில் தான் அவர்களின் இரண்டாவது குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தது.

பயங்கர சத்தம்
இந்நிலையில், குஷம் வெளியே துணிகளை காயப்போட்டு கொண்டிருந்த போது, வீட்டுக்குள் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அவர் வேகமாக வந்து பார்த்த போது, 8 மாதக் குழந்தை உடல் முழுவதும் தீக்காயம் பட்டு அலறிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறினர். இதையடுத்து, குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

குழந்தை உயிரிழப்பு
ஆனால், நேரம் செல்ல செல்ல குழந்தையின் உடல்நிலை மோசமாகிக் கொண்ட சென்றது. இதையடுத்து, நேற்று இரவு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், தெரியாமல் நடந்த விபத்தில்தான் குழந்தை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனால் போலீஸார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. எட்டே மாதம் ஆன குழந்தையின் உடலை கண்டு அதன் பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழத்தியது.

ஏன் வெடிக்கிறது செல்போன்?
பொதுவாக, செல்போன்கள் வெடிக்கும் பொருள் கிடையாது. அதில் இருக்கும் பேட்டரிதான் வெடிக்க்ககூடிய சாதனம் ஆகும். எனவே பேட்டரியை முறையாக பராமரித்தாலே செல்போன் வெடிப்பை தவிர்க்கலாம்.

நாம் செல்போன் வாங்கும் போது அதனுடன் சார்ஜரும் வழங்கப்படும். குறிப்பிட்ட செல்போனில் இருக்கும் பேட்டரியின் திறனுக்கு ஏற்ற சார்ஜர் அதுதான். அந்த ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தும் போது பேட்டரியின் வெப்பநிலை சீராக இருக்கும். ஆனால், குறைந்த திறன் கொண்ட பேட்டரிக்கு அதிக திறன் கொண்ட சார்ஜரை பயன்படுத்தும் போது சமநிலையற்ற வெப்பநிலை ஏற்பட்டு பேட்டரி வெடிக்கிறது.

அதேபோல், சார்ஜ் போட்டு பேசுவதும் ஆபத்தானதுதான். சார்ஜ் போட்டு பேசும் போது செல்போனுக்கு அதிக சிக்னல்கள் தேவைப்படுகிறது. அப்போது சார்ஜ் போட்டிருக்கும் பட்சத்தில் செல்போனுக்கு பாயும் வோல்ட் அளவில் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. இதுவும் பேட்டரியின் வெப்பநிலையை அதிகரித்து வெடிக்கச் செய்துவிடும். இதுபோல், நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளை தவிர்த்தாலே செல்போன் வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments