ஆலங்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கியில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்




நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் மத்திய அரசின் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனையை கண்டித்தும், இதில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுதலை செய்யக்கோரியும் வடகாடு முக்கத்தில் ஆலங்குடி பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் அப்துல் ரஜாக் தலைமை தாங்கினார். இதில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் அவர்களை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதேபோல் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அமைப்பினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

அறந்தாங்கியில் அண்ணா சிலை அருகே பாப்புலர் பிரண்டஸ் ஆப் இந்தியா அமைப்பினர் பாருக்கான் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments