போதிய பேராசிரியர்கள் நியமிக்க கோரி கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.




அரசு கலை கல்லூரி

கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன் விடுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவி மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிக்கு 42 பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 2 பேராசிரியர்கள் மட்டுமே நிரந்தரமாக பணியாற்றி வருகின்றனர். இதை தவிர 17 விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். 23 பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.

குறிப்பாக பி.எஸ்.சி. இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு பேராசிரியர்கள், ஆய்வக பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பி.எஸ்.சி. படிக்கும் மாணவர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல் மற்ற பாடப்பிரிவுகளுக்கும் பேராசிரியர்கள் இல்லாததால் புதிதாக கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கான பாடத்திட்டம் என்ன என்பது கூட தெரிந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தர்ணா போராட்டம்

இது குறித்து மாணவர்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ- மாணவிகள் நேற்று காலை கல்லூரி தொடங்கியவுடன் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே சென்றனர். பின்னர் கல்லூரி நுழைவு வாயிலின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போதிய பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேராசிரியர்கள் நியமிக்க உறுதி

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி துணை தாசில்தார் செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் அங்கு சென்று போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களுக்குள் கூடுதல் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments