அறந்தாங்கி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு அதிகாரி கார் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு.. நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்...



அறந்தாங்கி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு அதிகாரியின் கார் மோதியதில் 2 வாலிபர்கள் பலியாகினர். நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடி கம்பசேரி பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு (23). இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் நாகுடியில் இருந்து அறந்தாங்கிக்கு பொருட்கள் வாங்குவதற்கான சென்றனர். பின்னர் அங்கிருந்து நாகுடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
விபத்தில் பலியான இளைஞர்கள் 2 பேரின் உடல்

அப்போது அந்த வழியாக திருச்சி மண்டல பூச்சியியல் வல்லுனர் லதா பிரியா ஜோன் என்பவர் தனது அரசு காரில் வந்து கொண்டிருந்தார். அந்த காரை கரூர் மாவட்டம், கருவேப்ப நாயக்கன் பேட்டையை சேர்ந்த சஞ்சீவி (51) என்பவர் ஓட்டினார். களக்குடி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது ராமு வந்த மோட்டார் சைக்கிள் மீது அரசு கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ராமு, ராஜகுரு ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ராமு, ராஜகுரு ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் 

இதையடுத்து உயிரிழந்தவர்களுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும், கார் டிரைவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அப்போது கனமழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையிலும் மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த மறியலால் அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சஞ்சீவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments