புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்படுவது எப்போது? என அனைவரும் எதிர்பார்ப்பு!!



புதுக்கோட்டையில் முக்கியமான பகுதியாக திருவப்பூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. திருச்சி-காரைக்குடி மார்க்க ரெயில்வே தண்டவாள பாதையில் இந்த கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேட்டானது 5 ரோடுகள் சந்திக்கும் சாலையில் அமைந்துள்ளது.

அதாவது புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒரு சாலையும், திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் பகுதியில் இருந்து ஒரு சாலையும், அன்னவாசல் செல்லக்கூடிய சாலையும், பூசத்துறை நோக்கி செல்லக்கூடிய சாலையும், திருவப்பூர் கீழ வீதிகளுக்கு செல்லக்கூடிய சாலையும் சந்திக்கும் பகுதியாகும். ஒரு நாளைக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் என 18-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இந்த வழித்தடத்தில் செல்கின்றன. இதுதவிர வாராந்திர ரெயில்கள், சிறப்பு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் கடந்து செல்வது உண்டு.





5 சாலைகள் சந்திப்பு

இந்த வழித்தடத்தில் ரெயில்கள் செல்லும் போது சாலையின் இருபுறமும் ரெயில்வே கேட் மூடப்படும். இந்த இடத்தில் ரெயில்வே கேட் கீப்பர் பணியில் இருந்து ரெயில் வரும் போது கேட்டை மூடுவதும், கடந்து சென்ற பின்பு கேட்டை திறக்கும் பணியிலும் ஈடுபடுவது உண்டு. ரெயில்கள் இந்த கேட்டை கடந்து செல்லும் வரை மூடப்பட்டிருக்கும் நேரத்தில் 5 சாலைகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும்.

கேட் திறக்கப்படும் போது இரு சக்கர வாகனங்கள் இருபுறத்தில் இருந்தும் முந்திக்கொண்டு செல்வது உண்டு. இதனால் கார்கள், லாரிகள், பஸ்கள் போன்ற வாகனங்கள் நகருவதில் சிரமம் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் வாகனங்கள் 5 சாலைகளில் இருந்து ரெயில்வே கேட்டை கடக்க முற்படுகிற போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

மேம்பாலம்

இதற்கிடையில் இந்த வழியாக ஆம்புலன்ஸ்கள் அந்த நேரத்தில் வந்தால் போக்குவரத்தில் சிக்கி கொள்கிறது. போக்குவரத்து நெரிசல் சீரான பின்பே ஆம்புலன்ஸ்கள் கடந்து செல்லக்கூடிய நிலையில் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் நீண்ட காலமாக கோரிக்கைவிடப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்கப்படுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதில் ரெயில்வே மேம்பாலம் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும். புதுக்கோட்டை நகருக்குள் நுழைவு மற்றும் வெளியே செல்லக்கூடிய சாலையில் முக்கியமான இடத்தில் இந்த கேட் அமைந்திருப்பதால் ரெயில்வே மேம்பாலம் அவசியமாகுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments