சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதி




சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது.

சித்தன்னவாசல் சுற்றுலா தலம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் சுற்றுலா தலம் உள்ளது. இங்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்த சுற்றுலா தலத்தின் பூங்கா, படகு சவாரி அமைந்துள்ள இடம் உள்ளிட்ட பகுதிகள் தமிழக சுற்றுலாத்துறையின் சார்பிலும், குடவரைக் கோவில் சமணர் படுகை அமைந்துள்ள இடம் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இந்த சுற்றுலாத்தலத்தை பார்வையிட வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் சித்தன்னவாசலில் உள்ள மலைப்பகுதி பூங்கா உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பாட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை அதிகமாக குவிய தொடங்கியது. இதனால் சுற்றுச்சூழலும், மண் வளமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது.

அபராதம் விதிக்கப்படும்

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செயலர் ஹர் சகாய் மீனா சித்தன்னவாசலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொன்மை சின்னங்களின் அருகே கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி கழிவுகளை அப்புறப்படுத்திட உரிய ஏற்பாடுகளை செய்திட அறிவுறுத்தினார்.

இந்நிலையில் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

வாகனங்களில் சோதனை

சுற்றுலா தலத்தின் எந்த ஒரு பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. சித்தன்னவாசல் ஊராட்சி முழுமையுமே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தின் குடவரைக் கோவில் உள்ளிட்ட ஒரு பகுதி மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் இதுகுறித்து அவர்களுக்கும் கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளதாகவும் அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் அறிவிப்பு செய்துள்ளார்.

இதனையொட்டி சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறா என நுழைவு வாயிலில் சோதனை செய்யப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments