திருச்சி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நூதன முறையில் 13 பவுன் நகைகள் பறிப்பு மகள்-பேரன் விபத்தில் சிக்கி இருப்பதாக காரில் அழைத்து சென்று மர்மநபர்கள் கைவரிசை




திருச்சி அருகே மூதாட்டியிடம் மகள்-பேரன் விபத்தில் சிக்கி இருப்பதாக கூறி காரில் அழைத்து சென்று நூதன முறையில் 13 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியை

திருச்சியை அடுத்த நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி ஊராட்சி, பரஞ்சோதி நகரை சேர்ந்தவர் தெரஸ் ராஜாமணி (வயது 80). ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான இவர் சம்பவத்தன்று திருச்சியில் இருந்து ஒரு பஸ்சில் ஏறி தாளக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் தாளக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரை காரில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், தெரஸ் ராஜாமணியிடம் `உங்கள் மகள் மற்றும் பேரன் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்' என்று கூறி மூதாட்டியை ஏமாற்றி காரில் அழைத்துச்சென்றனர்.

வலைவீச்சு

சிறிது தூரம் சென்றதும் காரில் இருந்த மூதாட்டியை மிரட்டிய மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல் மற்றும் தோடு உள்ளிட்ட 13 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு மூதாட்டியை லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்று கரையில் இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தெரஸ் ராஜாமணி கொள்ளிடம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் நகைகளை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments