காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை குறித்து பொது நல மருத்துவர் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா விளக்கம்!!



காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி பொது நல மருத்துவர் சிவகங்கை Dr.A.B.ஃபரூக் அப்துல்லா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை:

✅1 . முதல் நாள் - பாராசிட்டமால் மாத்திரை மட்டும் கொண்டு காய்ச்சலை சரி செய்யலாம் / குளிர்ந்த நீரில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஓய்வு முக்கியம். 

✅2.இரண்டாவது நாள் காய்ச்சல் இருப்பின் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.  மருந்து கடைகளில் செட் மாத்திரை வாங்க கூடாது. 

✅3.மூன்றாவது நாள் வரை கடும் காய்ச்சல்  அடித்து, சட்டென உடல் குளிர்ந்தால் உடனே அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும். 

✅4.அங்கே, தங்கி சிகிச்சை பெறச் சொன்னால் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற வேண்டும். 

✅5.காய்ச்சல் வந்தால் தினமும் போதுமான அளவு நீரை பருக வேண்டும். ஓ.ஆர். எஸ் உப்புக்கரைசல் நீரை பருகுவது நல்லது. உணவை கஞ்சியாக குடிப்பது நல்லது. 

✅6.சிறுநீர் கழிப்பது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறையேனும் நிகழ வேண்டும். அதில் குறைபாடு இருப்பின் உடனே உள்நோயாளியாக சேர வேண்டும். 

✅7.மலத்தில் ரத்தம் வெளியேறுதல்/மலம் கருப்பாக செல்லுதல், வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகளை கண்டறிந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும். 

✅8.கடும் ஜுரம் அடிக்கும் வேலையிலும் காய்ச்சல் விட்ட மூன்று நாட்களும் ஓய்வு கட்டாயம் தேவை. 

❌ காய்ச்சல் வந்தால் செய்யக்கூடாதவை:

❌1.மருந்து கடைகளுக்கு சென்று கவுண்ட்டரில் மாத்திரை வாங்கி உண்பது கூடாது . 

❌2.போலி மருத்துவர்களிடமோ, மருந்தகங்களிலோ சென்று ஊசி போட்டுக் கொள்வது மகா பாதகச்செயலாய் அமைய வாய்ப்புள்ளது. போலி பரப்புரைகளை நம்பி சிகிச்சைகளை தாமதிக்க கூடாது. 

❌3.அரசு மற்றும் பிற மருத்துவமனைகளில் உள்நோயாளியாக தங்கியிருப்போர், மருத்துவர் அனுமதியின்றி முன்கூட்டியே மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு வரக்கூடாது ( டெங்கி காய்ச்சலில், ஜுரம் விட்ட அடுத்த மூன்று நாட்கள் தான் ஆபத்தானவை என்பதை நினைவில் கொள்க) 

❌4.கடும் ஜுரம் அடிக்கும் ஒருவர், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். வெயிலில் அலைச்சலை தவிர்க்க வேண்டும். 

❌5.டெங்கி நோய் ஒரு பகுதியில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்தால் அந்த இடத்திற்கு இயன்றவரை பயணம் செல்வது கூடாது. குழந்தைகள், முதியோரை அங்கு அழைத்துச் செல்ல கூடாது.
 
உங்கள் ஊரில் டெங்கி பரவிக் கொண்டிருந்தாலோ, உங்கள் வீட்டில் யாருக்கேனும் டெங்கு காய்ச்சல் வந்திருந்தாலோ அடுத்த இரண்டு வாரம் நீங்களும் டெங்கு பரவாத பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். 

பேஸ்புக் பதிவு:
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments