தமிழகத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை





தமிழகத்தின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுக்கிறது.

ரெயில்கள் வேகம் அதிகரிக்க...

தமிழ்நாட்டில் முக்கிய தடங்களில் பயணிகள் ரெயில்களை அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் இயக்க தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ரெயில் பாதைகளை பலப்படுத்துதல், நவீன மின்மயம், ரெயில் இயக்க சைகை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ரெயில்களின் வேகத்தை ரெயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி முறையே மணிக்கு 160 கி.மீ. மற்றும் 130 கி.மீ. என அதிகரிக்க முடியும்.

சென்னை - ரேணிகுண்டா பிரிவு

134.78 கி.மீ. தூரமுள்ள தங்க நாற்கர பாதையான சென்னை - ரேணிகுண்டா பிரிவில் ரெயில்களின் வேகம் ஏற்கனவே மணிக்கு 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ. என அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பிறகு இந்த பிரிவில் நடப்பு ஆண்டில் ரெயில்களின் வேகத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

‘பி’ பிரிவு ரெயில் பாதைகள்

மற்ற 'பி' பிரிவு ரெயில் பாதைகளான அரக்கோணம் - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - போத்தனூர் மற்றும் சென்னை - திண்டுக்கல் ஆகிய பிரிவுகளில் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பிரிவுகளில் தற்போதைய வேகமான மணிக்கு 110 கி.மீட்டரில் இருந்து அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகமான மணிக்கு 130 கி.மீ. என அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக வந்தே பாரத், சதாப்தி ரெயில்கள் இயக்கப்படும் 144.54 கி.மீ. தூரம் உள்ள அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேம்பாட்டு பணிகளை முடித்து ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மணிக்கு 110 கி.மீ. வேகம் அதிகரிப்பு

இந்த 2022 - 23-ம் நிதியாண்டில் இதுவரை விருத்தாச்சலம் - சேலம், தஞ்சாவூர் - பொன்மலை, விழுப்புரம் - காட்பாடி, நாகர்கோவில் - திருநெல்வேலி, விழுப்புரம் - புதுச்சேரி, தஞ்சாவூர் - காரைக்கால், கோயம்புத்தூர் வடக்கு - மேட்டுப்பாளையம் ஆகிய பிரிவுகளில் தற்போதைய வேகமான முறையே மணிக்கு 80, 100, 50-80, 100, 100, 50-90, 90 கி.மீ.-ல் இருந்து 110 கி.மீ.-க்கு அதிகரிக்க ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் இந்த நிதியாண்டில் அரக்கோணம் - செங்கல்பட்டு, திருநெல்வேலி - திருச்செந்தூர், தாம்பரம் - செங்கல்பட்டு, திருநெல்வேலி - தென்காசி, சேலம் - கரூர் - நாமக்கல், கடலூர் துறைமுகம் - விருத்தாச்சலம், திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை - வாஞ்சி மணியாச்சி ஆகிய பிரிவுகளில் தற்போதைய வேகமான முறையே மணிக்கு 75/90, 70, 100, 70, 100, 60/75, 100, 100 கி.மீ.-ல் இருந்து 110 கி.மீ.-க்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை - கூடூர் பிரிவு

134.3 கி.மீ. தூரம் உள்ள சென்னை - கூடூர் பிரிவு தங்க நாற்கர ‘ஏ' பிரிவு பாதையாகும். இந்த பிரிவில் கடந்த அக்டோபர் 5 முதல் ரெயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. தெற்கு ரெயில்வேயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்க அனைத்து தகுதிகளும் உள்ள முதல் ரெயில் பாதை பிரிவு சென்னை - கூடுர் ஆகும். இந்த பிரிவில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முன்பு ரெயில் பாதைகளின் பலம், மின்மய அமைப்புகள், சைகை விளக்குகள், ரெயில் பெட்டிகள் ஆகியவற்றின் திறனை சோதிக்க ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்புடன் இணைந்து தெற்கு ரெயில்வே பல்வேறு ரெயில் சோதனை ஓட்டங்கள் நடத்தியது. அனைத்து சோதனைகளிலும் வெற்றி கிடைத்தவுடன் தற்போது இந்த பிரிவில் ரெயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன.

மணிக்கு 160 கி.மீ. வேகம்

சென்னை -பெங்களூர் ரெயில் வழித்தடத்தில் ரெயில்களை மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. அதேபோல சென்னை - கூடூர், சென்னை - ரேணிகுண்டா ஆகிய பிரிவுகளில் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 160 கி.மீ.-க்கு அதிகரிக்க சம்பந்தப்பட்ட ரெயில்வேக்களும் விரிவான திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து உள்ளன.

இந்திய ரெயில்வேயில் 8 வழித்தடங்களில் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 160 கி.மீ.-க்கு அதிகரிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தகவல்கள், தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments