பொன்னமராவதி அருகே மகனுக்கு நீச்சல் கற்று கொடுத்தபோது கண்மாயில் மூழ்கி தந்தை பலி.




பொன்னமராவதி ஒன்றியம் செம்பூதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 38), விவசாயி. இவருடைய மகன் ஸ்ரீதர் (5). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் ராஜா தனது மகன் மற்றும் தாயார் சின்னாத்தாள் (60) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அங்குள்ள செங்கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளார்.

பின்னர் ராஜா தனது மகனுக்கு நீச்சல் கற்று கொடுப்பதற்காக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ராஜா, ஸ்ரீதர் ஆகியோர் கண்மாயில் மூழ்க தொடங்கினர்.

பிணமாக மீட்பு

இதனைகண்டு அதிர்ச்சியடைந்த சின்னாத்தாள் தனது பேரன் ஸ்ரீதரை பத்திரமாக மீட்டார். ஆனால் ராஜா தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்ணீரில் மூழ்கிய ராஜாவை இரவு 9.30 மணிவரை தேடினர். ஆனால் இருள் சூழ்ந்ததால் அவரை தேடும்பணி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை 6 மணியளவில் மீண்டும் தீயணைப்பு துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ராஜா பிணமாக மீட்கப்பட்டார்.

அப்போது அவரது உறவினர்கள் ராஜாவின் உடலை கண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments