திருப்புவனவாசல் அருகே மின்னல் தாக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!



புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அருகே மின்னல் தாக்கியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது.

மேலும் சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகா திருப்புனவாசல் அருகே பறையத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது அண்ணன் குழந்தைகள் சஞ்சய்,சஞ்சனா இருவரும் திருப்புனவாசலில் உள்ள ராமகிருஷ்ணா விவேகானந்தா மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்து வந்தனர். சஞ்சய் பதினொன்றாம் வகுப்பும் சஞ்சனா 10ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் பள்ளி முடிந்து தங்களது சித்தப்பா இளையாராஜாவின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும் போது மூன்று பேரையும் இடிமின்னல் தாக்கியது. இதில் பலத்த காயத்துடன் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.

சஞ்சனா, சஞ்சய் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இளையராஜாவை மீட்டு திருப்புனவாசல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மின்னல் தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடலும் தற்போது மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இளையராஜா மற்றும் அவரது அண்ணன் குழந்தைகள் சஞ்சய், சஞ்சனா மொத்தம் மூன்று பேரும் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பறையத்தூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த புதுவணக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரின் மனைவி சொர்ணம் நேற்று முன்தினம் மின்னல் தாக்கி உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக மின்னல் தாக்கி கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments