மின்சார பயன்பாட்டை நுகர்வோர் அறிந்து கொள்ள எச்சரிக்கை ஒலியுடன் கருவி- கீழக்கரை மாணவர் கண்டுபிடிப்பு






ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் சேகு பஷீர் அகமது. இவரது மகன் முகம்மது சமர் மரைக்கா (வயது 16). இவர் கீழக்கரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய கருவியை கண்டு பிடித்துள்ளார். இதுகுறித்து மாணவர் முகம்மது சமர் மரைக்கா கூறியதாவது:- வீடுகளில் பல்வேறு மின் சமையல் சாதனங்களை மக்கள் உபயோகித்து வருகின்றனர். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார யூனிட் அளவு தெரிந்து கொள்ள முடியாத நிலையில் ஏராளமானோர் இருந்து வருகின்றனர். இதனால் பயன்பாடு அதிகரித்து மின் கட்டணம் அதிகரித்து கட்டணத்தை செலுத்த முடியாத மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

மின்சார பயன்பாட்டை நுகர்வோர் முன்னதாக அறிந்து கொள்ளும் வகையில் கருவி தயாரித்து உள்ளேன். மின் பயன்பாட்டின் அளவு இலக்கை நெருங்கும்போது இந்தக் கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதன் மூலம் நாம் அதிகப்படியான மின்சார பயன்பாட்டை தவிர்த்து கொள்ள முடியும். தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது, அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட்வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல விகிதங்களில் மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது.

இந்த மின்சார மீட்டரில் 90 யூனிட் வந்தவுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை ஒலி எழுப்பும். அதே போல் பல விகிதங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் விழிப்புணர்வு அடைந்து மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடியும். மேலும் பல்வேறு வசதிகளை பெறும் வகையில் இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவியுடன் தான் இந்த கருவியை வீடுகளில் மீட்டரில் பொருத்த முடியும். இந்தக் கருவியை கண்டு பிடிக்க 6 மாத காலமானது. இதனுடைய மொத்த செலவு ரூ.1500 ஆகும். மின்சார பயன்பாட்டை நுகர்வோர் அறிந்து கொள்ள நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியில் ஆய்வு மேற்கொண்டேன். 

தற்போது அதற்கான கருவி கண்டு பிடித்துள்ளேன். இந்த கருவியை நிறுவியவுடன் மின் கட்டணம் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஏனென்றால், அவை நாம் மின்சாரத்தை பயன்படுத்தும் அளவை எச்சரிக்கை ஒலியாக அளிக்கும். நாம்தான் அதன் அடிப்படையில் மின்சாரத்தை பயன்படுத்தும் தன்மையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இதை சந்தைப்படுத்த அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் மாணவர் முகம்மது சமர் மரைக்காவை சந்தித்து வாழ்த்தினர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments