கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்: இலங்கை அரசை கண்டித்து ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது



இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது.

24 மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் அவர்கள் சென்ற 5 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மீனவர்களையும், அவர்கள் சென்ற படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீனவ சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.



ஆர்ப்பாட்டம்

இதையடுத்து நேற்று ஜெகதாப்பட்டினத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

அப்போது மீனவர்கள் குடும்பத்தினர் திடீரென சாலையில் அமர்ந்து கதறி அழுதனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்களும் கண்கலங்கினர். இதையடுத்து கோட்டைப்பட்டினம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாநிலம் தழுவிய உண்ணாவிரதம்

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினால் விசைப்படகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் வலைகளை கடற்கரையோரம் குவித்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து மீனவ சங்க நிர்வாகிகள் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் மீனவர்களையும், விசைப்படகுகளையும் உடனே மீட்டு தர வேண்டும். கச்சத்தீவை மீட்டு தருவதோடு இருநாட்டு மீனவர்களும் சுமுகமாக மீன்பிடிக்க வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

இதையடுத்து மீனவ சங்கத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து மீனவர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் மற்றும் வருவாய்த் துறையினர் ஆகியோர் கலந்துகொண்டு மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். பின்னர் அதிகாரிகள், மீனவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். மீனவர்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு தொழிலுக்கு செல்லும்படி வலியுறுத்தினர். ஆனால் மீனவர்கள் இதுகுறித்து சரியான முடிவு எட்டும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் மீனவர்கள் சார்பாக கலெக்டரை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை மனு கொடுக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு அதிகாரிகள் கலெக்டரை சந்திக்க உடனே ஏற்பாடு செய்து தருகிறோம் என்று உறுதி அளித்தனர். இதில் அதிகாரிகள், மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments