பாம்பன் புதிய ரெயில் பால பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடையும் : தெற்கு ரெயில்வே பொதுமேலாளர்




பாம்பன் புதிய ரெயில் பால பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடையும் என தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

ஆய்வு

ராமேசுவரம் ரெயில் நிலையம் மற்றும் தனுஷ்கோடி வரை புதிய ரெயில் பாதை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய தெற்கு ெரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ரெயில் மூலம் ராமேசுவரம் வந்தார். அவர் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை, முன்பதிவு மையம், பிளாட்பாரங்கள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.

அப்போது ராமேசுவரத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ரெயில் நிலைய கட்டிடத்தின் மாதிரி படங்களை பார்வையிட்டார். அதில் இடம் பெறும் பல்வேறு வசதிகள் குறித்து ரெயில்வே அதிகாரிகள், பொதுமேலாளரிடம் விளக்கி கூறினர்.

தொடர்ந்து, கார் மூலம் தனுஷ்கோடி பகுதிக்கு சென்றார். கம்பிப்பாடு பகுதியில், தனுஷ்கோடி புயலுக்கு முன்பிருந்த சிதலம் அடைந்த ரெயில் நிலையம் மற்றும் தற்போது ராமேசுவரம்-தனுஷ்கோடி, கம்பிப்பாடு கடற்கரை வரை அமைய உள்ள புதிய ரெயில் பாதை அமைய உள்ள ரெயில்வே வழித்தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாம்பன் வந்தார். பாம்பனில் இருந்து மோட்டார் டிராலி மூலம் ரெயில் பாலம் வழியாக சென்ற அவர் தூக்குப்பாலம் மற்றும் ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார். தூக்கு பாலத்தில் நின்றபடியே கடலுக்குள் ரூ.535 கோடி நிதியில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில்வே பாலத்தின் பணிகளையும் பார்வையிட்டார்.

மறு சீரமைப்பு

பின்னர் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமேசுவரம் ரெயில் நிலையம் ரூ.90 கோடி நிதியில் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் இன்னும் 2 மாதத்தில் தொடங்கப்படும். இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது.

பல்வேறு அதிநவீன வசதிகளுடன் ரெயில் நிலையம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. 2 மாடி கொண்டதாக ரெயில் நிலைய கட்டிடம் இருக்கும். விமான நிலையத்தில் உள்ள வசதிகள் போன்று ஏற்படுத்தப்படும்.

பாம்பன் கடலில் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே புதிய ரெயில் பாதை அமைய உள்ள இடங்களை சர்வே செய்து கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. .

விரைவில் பணிகள்

ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை பணிகள் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத வகையில் முறையாக அனுமதி பெற்று விரைவில் பணிகள் தொடங்கப்படும். அதுபோல் உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள விரிவாக்கத்திற்கான இடம் கேட்கப்பட்டு உள்ளதால் இடம் ஒதுக்கப்பட்ட பின்னர், அந்தப்பகுதியில் ரெயில் பாதை மாற்றத்திற்கு பிறகு ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே மின் வழிப் பாதை பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments