வருகிற 10-ந் தேதி வரை பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு




வருகிற 10-ந் தேதி வரை பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப கோளாறு

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ள ரெயில் பாலத்தின் மையத்தில் உள்ள தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 8 நாட்களாக பாம்பன் பாலத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

அதனால் ராமேசுவரம் வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி குழுவினர் மற்றும் தெற்கு ரெயில்வே பொறியாளர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

10-ந் தேதி வரை

பாம்பன் ரெயில் பாலத்தில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர்கள், காலி ரெயில் பெட்டிகளை பாம்பன் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவுகள் லக்னோ ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது.

மேலும் பராமரிப்பு பணிகளை தொடரும் வகையில் ஜனவரி 10-ந் தேதி வரை பாம்பன் ரெயில் பாலத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளியூர் ரெயில்கள்

இதனால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டு மீண்டும் அங்கிருந்தே வழக்கமான நேரத்தில் புறப்பட்டு செல்லும். அதுபோல் மதுரை, திருச்சி ஊர்களில் இருந்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில்கள், ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்லும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments