Pamban Bridge: புதிய பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் 84% நிறைவு! இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குபாலம்






பாம்பன் தீவையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் ஏறக்குறைய 84 சதவீதம் முடிந்துவிட்டன. இதற்கான புகைப்படங்களை ரயில்வே வெளியிட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் ஏராளமான விரிசல்கள் விழுந்ததையடுத்து, அதற்குப் பதிலாக புதிய பாலம் கட்ட கடந்த 2018ம் ஆண்டு மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இந்தத் திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு ரயில்பாலப் பணிகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல்நாட்டினார்.

இதைத் தொடர்ந்து 2019, ஆகஸ்ட்11ம் தேதி பூமிபூஜையுன் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. கடலுக்குள் 101 தூண்கள் அமைக்கப்பட உள்ளன, ஒட்டுமொத்த பாலத்தின் நீளம் 2,078 மீட்டராகும். இந்த பாலத்தை கட்டுவிக்க இரும்பு மிதவைகளில், கிரேன்கள், பாறைஉடைக்கும் எந்திரங்கள், சிமெண்ட் கலவை எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன

கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்திலும், ஒவ்வொரு தூண்களுக்கு இடையேயும் இணைப்புக்காக 99 கார்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெரிய கப்பல்கள் செல்லும் போது, பாலம் தானாக செங்குத்தாக தூக்கும் வகையில் ராட்சத லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம், பாம்பன் ரயில்பாலத்தின் பணிகள் 84 சதவீதம் முடிந்துவிட்டதாகத் தெரிவித்து ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் செங்குத்துதூக்குபாலத்தின் பணிகள் ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் பாலம் தயாராகிவிடும் எனத் தெரிவித்துள்ளது.






பாம்பன் ரயில் பாலம் குறித்த 5 முக்கிய தகவல்கள்

1.    இந்தியாவிலேயே கடலுக்குள் கட்டப்பட்டமுதல் ரயில்வே பாலம் பாம்பன் ரயில்வே பாலம். இது கடந்த 1914ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.

2.    இந்த பாலத்தின் நீளம் 2,078 மீட்டர், திட்டச் செலவு ரூ.279.63 கோடியாகும்.

3.    ரயில்விகாஸ் நிகம் தரப்பில் கூறுகையில் “ 2020, பிப்ரவரியில்பணி தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த பாலத்தின் சிறப்பு அம்சம் 72 மீட்டர் நீளமுள்ள செங்குத்து தூக்குபாலம், 17மீட்டர் உயரத்துக்கு பாலம் தூக்கப்பட்டு கப்பல் செல்ல வழிவிடும்

4.    தற்போதுள்ள பாலத்தில் ஹெர்சர் ரோலிட் லிப்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, பக்கவாட்டில் பாலம் திறக்கும். ஆனால், புதிய பாலம் செங்குத்தாக மேலே உயர்ந்து பாலத்தை திறக்கும். 

5.    இந்த பாலம் கட்டப்பட்டபின், ரயில்கள் வேகமாகச் செல்லலாம், அதிகமான பாரங்கள் ஏற்றிச் செல்லலாம்.

மேலும் இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை மண்டலம் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில் 

புதிய பாம்பன் பாலப் பணிகள் 2023 மார்ச்சில் நிறைவு பெறும்

தற்போது பயன்பாட்டில் இருக்கும் 105 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலம் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1988 ஆம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை ராமேஸ்வரம் தீவிற்கும் மண்டபத்திற்கும்  தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்தது. பழைய ரயில் பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வந்தன. அதனால் ரயில்கள் மிக மிக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. 

ரயில்களை விரைவாக இயக்கவும் அதன் மூலம் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும் நவீன புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்தது. தற்போது புதிய ரயில் பாலம் 2.05 கிமீ தூரத்திற்கு பாம்பன் கடலில் ரூபாய் 535 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானத்தை ரயில்வே துறையின் துணை அமைப்பான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் செய்து வருகிறது. 

இதுவரை 84 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. புதிய பாலத்திற்காக கடலில் பல்வேறு சீதோசன நிலை சிரமங்களுக்கிடையே 101 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தூண்களில் 99 இணைப்பு கிர்டர்கள் அமைக்க வேண்டும். இதில் இதுவரை 76 இணைப்பு கிர்டர்கள் அமைக்கப்பட்டு ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கப்பல்கள் எளிதாக பாலத்தைக் கடக்கும் வகையில் செங்குத்தாக உயரும் மின்தூக்கி இணைப்பு கிர்டர் தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த மின்தூக்கி கிர்டரை பொருத்துவதற்கான மேடைகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பழைய பாலத்தில் கப்பல் செல்வதற்காக பாலத்தின் நடுப்பகுதி இணைப்பை திறக்க  இரு புறமும் மனித ஆற்றல் பயன்படுத்தப்பட்டு வந்தது‌ குறிப்பிடத்தக்கது.  புதிய பாம்பன் பாலப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 

இந்த புதிய பாலம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments