குண்டும் குழியுமான கிழக்கு கடற்கரை சாலையை சீர் செய்ய கோரிய வழக்கு தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு




கிழக்கு கடற்கரை சாலையை சீர் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பொதுநல மனு

மயிலாடுதுறையை சேர்ந்தவர் வக்கீல் கே.ராஜேந்திரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். சென்னையில் இருந்து மாமல்லபுரம், கல்பாக்கம், ஆரோவில், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருக்கடையூர், காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், நாகூர், வேளாங்கண்ணி போன்ற வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், இந்த சாலையை கண்டு கொள்வது இல்லை. முறையாக பராமரிப்பதும் இல்லை. இதனால், குண்டு குழியுமாக இந்த சாலை உள்ளது.

மரம் வெட்ட தடை

குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் வாகனங்களில் பயணம் செய்வோரின் இடுப்பு, முதுகுதண்டு வடம் பாதிக்கப்படுகிறது. மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி செல்வதால் வாகனங்களும் பழுதடைந்து விடுகிறது.

இந்த சாலையில் குறியீடு பலகைகள் இல்லை. இதனால் தினமும் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன. இதன்மூலம் விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகின்றன. ஆனால், இந்த சாலையை சரி செய்யாமல், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலை இருபக்கமும் உள்ள பெரிய மரங்களை வெட்டி அப்புறப்படுத்துகின்றனர். இதனால் சூற்றுச்சூழல் பாதிக்கப்பட உள்ளது. இப்பகுதிகளில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை என்பதால், இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. எனவே, கிழக்கு கடற்கரைச் சாலையை சீர் செய்ய உத்தரவிட வேண்டும். சாலையில் இருபுறமும் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பதில்

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments