வலைகள் சேதம் அடைந்ததால் பரபரப்பு: நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் இடையே தகராறு மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம்




வலைகள் சேதம் அடைந்ததால் நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மீனவர்கள் இடையே தகராறு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியை சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் நேற்று நாட்டுப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் 3 நாட்டிக்கல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களும் அதே பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

விசைப்படகு மீனவர்கள் 5 நாட்டிக்கல் தொலைவிற்கு அப்பால் தான் மீன்பிடிக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் 3 நாட்டிக்கல் பகுதியில் மீன்பிடித்ததால் நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சேதம் அடைந்ததாக கூறி நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

பின்னர் கரை திரும்பிய கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களை நாட்டுப்படகு மீனவர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் மற்றும் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பு மீனவர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments