விராலிமலையில் கடந்த 2 நாட்களில் 35-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்தன




விராலிமலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காமராஜர் நகர், கடைவீதி, அம்மன்கோவில் தெரு, தேரடி தெரு, சோதனைச்சாவடி, அருண்கார்டன் உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. இப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் சுற்றித்திரிந்து வருகிறது.

மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் தெருநாய்கள் விரட்டும்போது அவர்கள் தப்பித்து செல்ல முற்படும்போது கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டு விடுகின்றன. சிலசமயம் தெருநாய்கள் சண்டைபோட்டுக்கொண்டு ஓடும்போது தெருக்களில் விளையாடும் சிறுவர்களை கடிப்பதும் தொடர்கதையாக உள்ளன.

35-க்கும் மேற்பட்டோரை கடித்தது

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று முன்தினம் மாலையிலிருந்து நேற்று வரை கடந்த 2 நாட்களாக விராலிமலை தேரடி தெருவை சேர்ந்த அசோக்குமார் மகள் யாசினி (வயது 5), பழனிவேல் மனைவி தைலம்மை (45), அய்யப்பா நகரை சேர்ந்த பன்னீர் செல்வம் மகள் கார்டில் மீனா (13), கலிங்கிப்பட்டியை சேர்ந்த சிவலிங்கம் மகன் பாலமுருகன் (12), செரளப்பள்ளத்தை சேர்ந்த அன்பழகன் (45), கருப்பையா, காணியாளம்பட்டியை சேர்ந்த ஜீவானந்தம் (28), கொடிக்கால்பட்டியை சேர்ந்த மருதுஅழகன் (26), மாரிக்கண்ணு (45), விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ், அஞ்சலை (39), அப்துல்கலாம் (25), ஆசிரியர் விக்டோரியா உள்பட பழனி மற்றும் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் என 35-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.


இதையடுத்து அனைவரும் தனித்தனியாக சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளித்த டாக்டர்கள் காயம் அதிகமாக உள்ள நபர்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தி ஒரு நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தினர். ஆனால் பழனி மற்றும் சமயபுரம் ஆகிய கோவில்களுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கோவிலுக்கு செல்வதை பாதியில் நிறுத்த முடியாது. எனவே தங்கள் சொந்த ஊரில் சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி சென்று விட்டனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு உரிமையாளர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பர். ஆனால் தெருக்களில் திரியும் நாய்களுக்கு அவ்வாறு தடுப்பூசி செலுத்தி இருக்க வாய்ப்பு இல்லை என்ற காரணத்தினால் இங்கு தங்கி சிகிச்சை பெறும் அனைவருக்கும் டி-டி தடுப்பூசி மற்றும் வெறிநாய் கடிக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.

நாய்களை பிடிக்கும் பணி மும்முரம்

கடந்த 2 நாட்களில் 35-க்கும் மேற்பட்ட நபர்களை தெருநாய்கள் கடித்த சம்பவம் விராலிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெருநாய்களை பிடிப்பதற்கான பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments