ஆவுடையார்கோவில் அருகே தர்மச்சக்கர கல் தூண் கண்டெடுப்பு




ஆவுடையார்கோவில் அருகே தர்மச்சக்கர கல் தூண் கண்டெடுக்கப்பட்டது.

தர்மச்சக்கர கல் தூண்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே புதுவாக்காடு ஊரணிக்கரை அருகே நிலத்தை சீர் செய்யும் போது தர்மச்சக்கர புடைப்பு சிற்பத்துடன் கல் தூண் வெளிப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் எக்ஸ்.எடிசன் மற்றும் புதுவாக்காடு கிராம இளைஞர்கள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்திற்கு தகவல் அளித்தனர். இந்த சிற்பம் புத்த சமயத்தில் மிக முக்கிய சின்னமாக கருதப்படும் தர்மச்சக்கரம் என்பதை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது:- தர்மச்சக்கரம் அல்லது அறவாழி என்பது புத்த சமணம் மற்றும் வைணவ மதங்களில் முக்கிய சின்னமாக உள்ளது. தற்போது அடையாளப் படுத்தப்பட்டுள்ள தர்மச்சக்கரம் எட்டு ஆரங்களுடன் ஒரு தாங்கியில் வைக்கப்பட்டிருப்பது போல பொறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தாங்கிப்பலகையில் சக்கரத்திற்கு அடிப்புறத்தில், தெளிவற்ற மான் உருவம் இருமருங்கிலும், மையத்தில் விளக்கு அமைப்பும் காட்டப்பட்டிருக்கிறது. இது புத்த தர்மச்சக்கரத்தோடு தொடர்புடையது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

துறவிகள்

மேலும் சக்கரத்தின் மேல்புறமாக ஒரு ஒளிக்கீற்று காட்டப்பட்டிருக்கிறது. இது புத்தருக்கு காட்டப்படும் ஒரு முக்கியமான அடையாளமாகும். வைணவ சக்கரங்களில் இந்த தீச்சுவாலை அமைப்பு மூன்று புறங்களில் காட்டப்படும், புடைப்பு சிற்பத்தில் மேல்புறம் மட்டும் காட்டப்பட்டிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தர்மச்சக்கரத் தூண் நீர் நிலைக்கு அருகாமையில் கிடைத்துள்ளதால், மக்களுக்காக இந்நீர் நிலையை ஏற்படுத்தியவர்களால் நட்டுவிக்கப்பட்டிருக்கலாம் என்பதை அனுமானிக்க முடிகிறது.

மேலும் இது போன்ற அடையாளத் தூண்கள் நிலங்களின் எல்லைகளை குறிப்பதற்கும் தாம் செய்வித்த பொதுப்பணியை, எந்நோக்கத்திற்காக செய்தோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும், நட்டுவிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. இது பவுத்த துறவிகள் அல்லது அந்த மதத்தை பின்பற்றியவர்கள் இப்பகுதியில் இருந்திருப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.

பவுத்தம்

கடற்கரை அருகாமை கிராமமாக இது இருப்பதோடு, ஆவுடையார்கோவில் பகுதியிலுள்ள கரூர் கிராமத்திலும், மணமேல்குடி அருகே வன்னிச்சிப்பட்டினம் எனும் ஊரில் புதுக்கோட்டை வரலாற்று அறிஞர் ராஜாமுகமதுவால் 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டு, காணாமல் போன புத்தர் சிற்பம் கண்டறிந்த இடமும், கடலோர இலங்கைத்தீவும் அருகாமை பகுதிகளாக இருப்பதால், பவுத்தம் இப்பகுதியில் பரவியிருந்ததை வெளிப்படுத்தும் சான்றாக இத்தூண் கண்டுபிடிப்பை கருதமுடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments