வசதிகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு





தங்களது படிப்புக்கு ஏற்ற வசதி, வாய்ப்புகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற முதுநிலை டாக்டர்கள் மறுக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வசதி இல்லை

தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவ மேற்படிப்பு முடித்த டாக்டர்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 ஆண்டுகளுக்கு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த 19 டாக்டர்கள், தங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய வசதிகள் இல்லை என்று கூறி தங்களுக்கான பணி நியமனத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘மருத்துவ படிப்பில் நிபுணத்துவம் பெற்ற தங்களை அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளில் மட்டுமே நியமிக்க வேண்டும். எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமித்திருப்பது தவறானது' என்று வாதிடப்பட்டது.

சமுதாய சேவை

தமிழ்நாடு அரசு தரப்பில், மனுதாரர்களில் 8 பேர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், எஞ்சிய 11 பேர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு டாக்டர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வின்போது அவர்கள் தேர்வு செய்த இடங்களில்தான் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ மேற்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு அதிகமான தொகையை செலவு செய்கிறது. அதற்கு பிரதிபலனாக, மேற்படிப்பு படிக்கும் டாக்டர்கள் இந்த சமுதாயத்துக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் 2 ஆண்டுகள் கண்டிப்பாக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையே விதிக்கப்பட்டுள்ளது.

இலவச சேவை இல்லை

இந்த சேவையை முதுநிலை டாக்டர்கள் இலவசமாக செய்வதில்லை. ஊதியம் பெற்றுக்கொண்டுதான் செய்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்துவரும் நிலையில், தங்களது படிப்புக்கு ஏற்ற வசதி, வாய்ப்புகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லை. அங்கு பணியாற்ற முடியாது என மனுதாரர்கள் மறுப்பு தெரிவிக்க முடியாது.

இந்த மருத்துவ நிபுணர்களின் சிறப்பு சிகிச்சை கிராமப்புற மக்களுக்கும் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். தங்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை பொதுமக்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கக்கூடிய நிலையில், அந்த மதிப்புமிகு கடவுளர்கள் தங்களது பொன்னான நேரத்தை இதுபோல வழக்கு தொடர்ந்து வீணடிக்கக்கூடாது.

தள்ளுபடி

எனவே, மனுதாரர்கள் 19 பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வருகிற 10-ந் தேதிக்குள் பணியில் சேரவேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments