தேவகோட்டையில் பிளஸ் 1 மாணவி பலாத்காரம் சீரழித்த 3 பேர் கைது





சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பிளஸ் 1 மாணவியை பகலில் பட்டினியுடன் தவிக்க விட்டு இரவில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் மூவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இம்மாணவியின் அம்மா இறந்து விட்டார். அக்கா திருமணமாகி வெளியூர் சென்று விட்டார். அப்பா கூலி வேலைக்கு சென்றதால் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

தேவகோட்டை அருகே பாவனக்கோட்டை அண்ணாத்துரை மகன் கார்த்திக் 31, பிப்., 6 வீட்டில் தனியாக இருந்த மாணவியை ரூ.3,000த்துடன் கடத்தி சென்றார். மாணவியின் தந்தை மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லை. தந்தையே மகளை தேடினார். பிப்., 8 இரவு 11:00 மணிக்கு தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் மயங்கி கிடந்த மகளை மீட்டார்.

இவ்வழக்கில் முதலில் கார்த்திக்கை தேவகோட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர். அதன் பின் மேல் விசாரணை செய்ய போலீசார் அக்கறை காட்டவில்லை. போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரித்ததை தொடர்ந்து மகளிர் போலீசார் பிப்., 10ல் மாணவியை காரைக்குடி குற்றவியல் நடுவர் ஜெயபிரபா முன் ஆஜர்படுத்தினர்.

மாணவி அளித்த வாக்குமூலத்தில் கார்த்திக் பகல் முழுவதும் பஸ் ஸ்டாண்டில் பசியுடன் தவிக்க விட்டு இரவில் டிபன் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன் நண்பர்களுக்கு இரையாக்கியதும் தெரிந்தது. கார்த்திக் நண்பர்கள் மாணவியை பாலியல் கொடுமை செய்து பகலில் பஸ் ஸ்டாண்டில் விட்டு சென்றனர்.

இதில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலபட்டினம் அப்துல்லா மகன் முகமதுஷெரீப் 22, திருவேகம்புத்துார் அருகே அங்காளகோட்டை சேகர் மகன் விஜய் 23, மற்றும் தேவகோட்டை வாரியன்வயல் சிறுவனை கைது செய்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் முன் போலீசார் ஆஜர்படுத்தினர்.

முகமதுெஷரீப், விஜய்யை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, சிறுவனை சிவகங்கை இளஞ்சிறார் நீதிமன்ற நீதிபதி அனிதா கிறிஸ்டி முன் விசாரணைக்கு ஆஜர்படுத்த அறிவுறுத்தினார்.

மாணவியின் அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்களின் அலைபேசி எண்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாணவி மற்றும் கைதானோர் அலைபேசிகளை சென்னை தடயவியல் ஆய்வக பரிசோதனைக்கும் அனுப்பியுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments