டெல்லி - மும்பை இடையே ரூ.1 லட்சம் கோடியில் இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலை... பிரதமர் மோடி திறந்து வைத்தார்




நாட்டின் 6 மாநிலங்களை இணைக்கும் வகையில் ரூ.1.03 லட்சம் கோடியில் உருவாகி வரும் டெல்லி - மும்பை விரைவுநெடுஞ்சாலையின் ஒரு பகுதியை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

டெல்லி - மும்பை விரைவு சாலைக்குமத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த 2019 மார்ச் 8-ம்தேதி அடிக்கல் நாட்டினார். இதன்படி, டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களை இணைக்கும் வகையில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் 1,386 கி.மீ. தொலைவுக்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது. இது நாட்டின் மிக நீளமான விரைவு சாலையாகும்.

தற்போது 8 வழி சாலையாக அமைக்கப்படும் இந்த விரைவு சாலையை 12 வழிசாலையாக விரிவுபடுத்த இடவசதி உள்ளது. டெல்லி முதல் மும்பை வரைஜெர்மன் தொழில்நுட்பத்தில் சாலைஅமைக்கப்பட்டு வருகிறது. சாலை நெடுகிலும் 500 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறுக்கே மனிதர்கள், விலங்குகள் செல்லாத வகையில் சாலை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தசாலையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யலாம். 50 கி.மீ. இடைவெளியில் ஓய்வெடுக்க இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு விடுதி, ஓட்டல், ஏடிஎம், மளிகை கடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சாலையோரம் 93 இடங்களில் சிறாருக்கான பொழுதுபோக்கு பூங்காக்கள்அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு 100 கி.மீ. தொலைவு இடைவெளியில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படுகின்றன. விபத்து ஏற்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியில் ஈடுபட ஏதுவாக, ஆங்காங்கே முக்கிய இடங்களில்ஹெலிபேட் வசதியும் செய்யப்படுகிறது.

நாட்டின் முதல் இ-சாலை


விரைவு சாலையின் ஒரு வழித்தடம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட உள்ளது. இதுவே நாட்டின் முதல் இ-சாலை ஆகும்.விரைவு சாலை முழுவதும் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. முகுந்தரா தேசிய பூங்கா, ரந்தம்பூர் தேசியபூங்கா உள்ளிட்ட 5 உயிரியல் பூங்காக்களை விரைவு சாலை கடந்து செல்கிறது. இப்பகுதிகளில் விலங்குகள் பாதுகாப்பாக கடந்து செல்ல செடி, கொடிகள், மரங்களுடன் கூடிய மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதாவது மேம்பாலத்தின் மேற்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக காட்சியளிக்கும்.

இந்நிலையில், டெல்லி - மும்பை விரைவு சாலையில் முதல் கட்டமாக டெல்லியில் இருந்து ராஜஸ்தானின் லால்சாட் வரை ரூ.12,150 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 246 கி.மீ. சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். ராஜஸ்தான் மாநிலம் தவுசாவில் நடைபெற்ற தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:

உலகின் மிகச் சிறந்த விரைவு சாலைகளில் டெல்லி - மும்பை விரைவு சாலையும் இடம்பெற்றுள்ளது. இது நாட்டின்வளர்ச்சிக்கு சான்றாக விளங்குகிறது. வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கிறது என்பதை இது உறுதி செய்கிறது.

பாஜக ஆட்சியில், உலகத் தரத்தில் சாலைகள், ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்புக்காக பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. சாலை வசதி மேம்படும்போது வர்த்தகம் பெருகும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

டெல்லி - லால்சாட் விரைவு சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்த சாலையால், டெல்லி - ஜெய்ப்பூர் இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும்.

இவ்வாறு அவர் கூறினார். ராஜஸ்தானில் ரூ.18,100 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசியபோது, ‘‘இந்த சாலையின் ஒரு வழித்தடம் முழுவதுமாக மின்சார வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, மின்சார ரயில்களுக்காக தண்டவாளத்தின் மேலே மின் வயர்கள் அமைப்பதுபோல, விரைவு சாலையின் மேல்பகுதியில் மின்சார வயர்கள் அமைக்கப்படும். இது நாட்டின் முதல் மின்சார சாலையாகும். 2024-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு இணையாக இந்திய சாலைகள் இருக்கும்’’ என்றார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் ஆகியோர் காணொலிவாயிலாக விழாவில் பங்கேற்றனர்.

மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘டெல்லியில் இருந்து மும்பைக்கு சாலைமார்க்கமாக செல்ல இப்போது 24 மணி நேரம் ஆகிறது. சாலைமுழுமையாக பயன்பாட்டுக்கு வந்த பிறகு 12 மணி நேரத்தில் செல்லலாம். சாலைபணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.சாலையோரம் பூங்கா, ஓட்டல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பணி டிசம்பரில் முடியும்’’ என்றனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments