காரைக்குடி - இராமநாதபுரம்‌ - கீழக்கரை - தூத்துக்குடி - காயல்பட்டினம் - திருச்செந்தூர் - கன்னியாகுமரி இடையேயான கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பட்ஜெட்டில் கைவிரிப்பு




எட்டு புதிய இருப்புபாதை திட்டங்களும், ஒரு இருப்பு பாதை திட்டத்துக்கு சர்வே மறுமதிப்பீடும் அறிவிக்கப்பட்டது. இதில் மறுமதிப்பீடு சர்வே திட்டத்தின் கீழ் இந்த கிழக்கு கடற்கரை பாதை திட்டம் அறிவிக்கப்படவில்லை. இது தென்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு புதிய ரயில் இருப்பு பாதை திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அறிவித்த புதிய இருப்புபாதை திட்டங்களில் மதுரை -தூத்துக்குடி தவிர மற்ற அனைத்து திட்டங்களும் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு என சர்வேக்கு தெற்கு ரயில்வே மண்டலத்தில் மொத்தம் 25 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன . இதில் எட்டு புதிய இருப்புபாதை திட்டங்களும், ஒரு இருப்பு பாதை திட்டத்துக்கு சர்வே மறுமதிப்பீடும் அறிவிக்கப்பட்டது. இதில் மறுமதிப்பீடு சர்வே திட்டத்தின் கீழ் இந்த கிழக்கு கடற்கரை பாதை திட்டம் அறிவிக்கப்படவில்லை. இது தென்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மறுமதிப்பீடு சர்வேக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த திட்டத்தின் ரேட் ஆப் ரிட்டன் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ரேட் ஆப் ரிட்டன் வருவாய் அதிகரித்தால் அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த திட்டம் எடுத்து செயல்படுத்த பிரகாசமான வாய்ப்பு வரும். இதற்கு கூட பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தொழில் வளர்ச்சி இல்லாமை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, கோவை, மும்பை மற்றும் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருக்கின்றர்.

மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் விருதுநகர் – மானாமதுரை, திருநெல்வேலி – திருவனந்தபுரம் பாதை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகள் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. திருநெல்வேலி – நாகர்கோவில் 74 கி.மீ புதிய அகல ரயில்பாதை 08-04-1981-ம் தேதியும், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் 87 கி.மீ புதிய அகல ரயில்பாதை – 15-04-1979 அன்று விருதுநகர் – அருப்புக்கோட்டை மீட்டர்கேஜ் பாதை 01-09-1963 அன்று அருப்புக்கோட்டை – மானாமதுரை மீட்டர்கேஜ் பாதை 02-05-1964-ம் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இந்த இரண்டு திட்டங்கள் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 க்கு பிறகு தென் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இருப்பு பாதைகள் ஆகும். அதன் பிறகு இதுவரை எந்த ஒரு புதிய பாதையும் தென்மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை. பாரத பிரதமர் மோடி 2014 தேர்தலுக்கு முன்பு கடந்த 75 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் அரசு எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் செய்யவில்லை என்று பலமுறை தேர்தல் பிரச்சாரங்களில் பெரிதாக பேசப்பட்டது. இதனால் மோடி அவர்கள் பிரதமர் ஆனால் இந்த கிழக்கு கடற்கரை பாதை திட்டத்தை கண்டிப்பாக அறிவித்து செயல்படுத்துவார் என்று மிகவும் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த திட்டம் இதுவரை அறிவிக்கப்படாதது தென்மாவட்ட மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறைந்த பட்சம் இந்த திட்டம் ரிசர்வே மறுமதிப்பீட்டுக்கு கூட அறிவிக்கப்படவில்லை.

கிழக்கு கடற்கரை ரயில் பாதை:-

கிழக்கு கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை ரயில் மூலம் இணைக்கப்பட வேண்டும் என்று தென் தமிழ்நாடு மக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது. கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் போது இந்த வழி தடத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்துடன் நேரடியாக ரயில் வழி பாதை மூலம் இணைக்க பட்டுவிடும். இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த பகுதியில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். தற்போது கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயிலில் பயணிக்க வேண்டுமானால் நாகர்கோவில்,திருநெல்வேலி வழியாக 136 கி.மீ பயணித்த சுற்று பாதையில் தான் செல்ல முடியும். கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கப்பட்டால் பயணதூரம் 70 கி.மீ மட்டுமே ஆகும்.

குலசேகரபட்டினம் ரயில்பாதை

திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி – கே.பி.என் சந்தைக்கு ஆங்கிலேயர் காலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயர்கள் தூத்துக்குடி, குலசேகரப்பட்டினம், கொற்கை ஆகிய துறைமுகங்களின் வாயிலாக பன்னாட்டு வணிகத்தில் கிழக்கிந்திய கம்பெனியினர் ஈடுபட்டனர். குலசேகரப்பட்டினத்தில் சர்க்கரை ஆலையை தொடங்கிய 1914ம் ஆண்டு “பாரி அன் கோ’ எனும் நிறுவனம் மூலம் குலசேகரப்பட்டினத்திலிருந்து திசையன்விளைக்கு 16.5 மைல் தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தனர். அப்பாதையில் 18.07.1915 முதல் பயணிகள் ரயில் ஒன்றும், சரக்கு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. இந்த ரயில் பாதை 1929ம் ஆண்டு திருச்செந்தூர் வரை மேலும் 27 மைல்கள் நீட்டிக்கப்பட்டது. திசையன்விளையில் இருந்து இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை வழியாக திருச்செந்தூருக்கு தினமும் மூன்று ரயில்களும், திசையன்விளை வாரச்சந்தை நாளான வெள்ளிக்கிழமை அன்று அதிகப்படியாக சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. திசையன்விளைக்கும் திருச்செந்தூருக்கும் இடையிலான பயணக்கட்டணம் 13 அனாவாக இருந்தது. இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 4.2.1940 ல் இந்த ரயில் சேவை முற்றிலும் முடங்கி போனது. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் இயக்கப்ட்டதங்கான எந்த அறிகுறியும் இல்லை.

கன்னியாகுமரி – காரைக்குடி புதிய ரயில் பாதை:-

கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர்,தூத்துக்குடி, காயல்பட்டினம்,ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில் இருப்பு பாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை புதிய ரயில் இருப்பு பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி முடிவடைந்து திட்ட மதிப்பீடு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே சமர்பித்துவிட்டது. இந்த ஆய்வுப்பணி இரண்டு பிரிவுகளாக நடந்தது.

காரைக்குடி – தூத்துக்குடி:

காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய ரயில் பாதை அமைக்க ஆய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வு பணியில் 214.81 கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்க 879 கோடிகள் தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் தேவகோட்டை, தேவிப்பட்டிணம்,கீழக்கரை, ஏர்வாடி,சாயல்குடி,சூரங்குடி வழியாக தூத்துக்குடி சர்வே செய்யப்பட்டது.

தூத்துக்குடி – கன்னியாகுமரி:-

கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி வழியாக ராமநாதபுரம் வரை பாதை அமைக்க நடைபெற்ற ஆய்வு பணியில் இந்த திட்டம் 247.66 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க 1080 கோடிகள் தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டினம், மணிநகர், திசையன்விளை,நாவலடி,கூடங்குளம், மகாராஜபுரம்,பெருமாள்புரம் வழியாக கன்னியாகுமரி செல்லும்.

மொத்த ரயில் நிலையங்கள்:-

காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களை சேர்த்து ; 462.47 கி.மீ தூரத்தில் 1965.763 கோடிகள் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேட் ஆப் ரிட்டன்:-

பொதுவாக ரயில்வே வாரியம் மற்றும் திட்ட குழு ஒரு புதிய ரயில்வே இருப்பு பாதை திட்டத்தை பல கோடிகள் முதலீடு செய்து செயல்படுத்தும் முன்பு இந்த திட்டம் பொருளாதார அளவில் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் திருப்பி கிடைக்கும் என்பதை கணக்கில் கொண்டு திட்டத்தை அறிவிப்பார்கள். இதை ரேட் ஆப் ரிட்டன் என்று கூறுவார்கள். இந்த கிழக்கு கடற்கரை பாதை ரயில்வே திட்டம் துறைமுகம், மின்திட்டங்கள், சரக்கு போக்குவரத்து,சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் என பல்வேறு வழிகளில் வரும் பொருளாதார வருமானங்களை கணக்கில் கொண்டு இந்த டேட் ஆப் ரிட்டன் கணக்கீடு செய்யப்படும். இந்த கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தில் காரைக்குடி – தூத்துக்குடி மைனஸ் -8.35மூ ரேட் ஆப் ரிட்டன் ஆகவும் தூத்துக்குடி – கன்னியாகுமரி பாதை -8.88மூ ரேட் ஆப் ரிட்டன் ஆகவும் உள்ளது. இவ்வாறு குறைவாக ரேட் ஆப் ரிட்டன் உள்ளதால் இந்த திட்டம் செயல்படுத்துவதில் பெரும் சிக்கல் உள்ளது. இவ்வாறு குறைவாக ரேட் ஆப் ரிட்டன் வரும் திட்டங்களை ஆய்வு செய்து விட்டு கைவிட்டு விடுவார்கள். இவ்வாறு கைவிடப்பட்ட திட்டங்கள் பல உள்ளன. ரேட் ஆப் ரிட்டன் குறைவாக உள்ள காரணத்தால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ரயில்வே வாரியம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கிடப்பில் திட்டம்

ரயில்வே வாரியம் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற ஆய்வு அறிக்கையை பொதுமக்களுக்கு இணையதளத்தில் வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி இந்த கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் ரேட் ஆப் ரிட்டன் குறைவாக இருக்கும் காரணத்தால் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தென்மாவட்ட பயணிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தென்மாவட்ட வளர்ச்சிக்கு வேண்டி இந்த கிழக்கு கடற்கரை ரயில் பாதையை சிறப்பு திட்டத்தின் கீழ் மீண்டும் ஆய்வு செய்து வருகின்ற ;பட்ஜெட்டில் அறிவித்த சிறப்பு கவனம் செலுத்தி போதிய நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை உடனடியாக துவங்கப்பட வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மறுமதிப்பீடு சர்வே

இந்த திட்டம் சர்வே செய்யும் 2009 முதல் 2011 வரை இந்த பகுதிகள் பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த கிழக்கு கடற்கரை ஓரமாக பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையம், குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம், கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலம், மின் திட்டங்கள் என பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இருப்பு பாதை திட்டத்தை மீண்டும் மறுமதிப்பீடு சர்வே செய்ய வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஏனென்றால் மறுமதிப்பீடு சர்வே செய்தால்தான் தற்போது இந்த திட்டத்தின் நிதி எவ்வளவு ஆகும், வருவாய் எவ்வளவு கிடைக்கும் என முழு விவரங்கள் தெரியவரும். ஆனால் ரயில்வே நிர்வாகம் இந்த திட்டத்தை மறுமதிப்பீடு சர்வே செய்ய கூட தயாராக இல்லை. தென்மாவட்ட மக்கள் முதலில் இந்த திட்டத்தை மறுமதிப்பீடு சர்வே செய்ய கோரிக்கை வைத்தார்கள். அதற்கு கூட மத்திய அரசு தயாராக இல்லை.

சீனாவின் ஆதிக்கம்:

அருணாசல் பிரதேசம் மாநிலத்தில் சீனாவுடன் எல்லை பங்கிட்டு வருகின்ற காரணத்தால் இந்த மாநிலத்தில் பல்வேறு புதிய இருப்புபாதை திட்டங்களை பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிந்துரையின் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அருகில் எல்லை பகுதிகள் கன்னியாகுமரி முதல் காரைக்குடி வரை உள்ள கடற்கரை பகுதிகள் உள்ளன. இது மட்டுமல்லாமல் இந்த கடற்கரை பகுதிகளில் தான் அதிக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் உள்ளன. அதாவது அணுமின் நிலையம், ராக்கெட் ஏவுதளம், நாங்குநேரி கடற்படை முகாம் இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகவே இந்த திட்டம் இந்திய ராணுவம் சார்ந்த பாதுகாப்பு சார்ந்த திட்டம் ஆகும். இந்த திட்டத்தை உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

தலைமன்னார் – தனுஷ்கோடி ரயில் பாதை சர்வே

தற்போது ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய இருப்பு பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு முதலில் சர்வே செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி செய்ய தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சரக்குகள் மற்றும் சேவைகளின் இயக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட ஒரு நடவடிக்கையாக வட இலங்கையில் ஒரு நூற்றாண்டு பழமையான ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் திட்டங்களுக்கு இந்திய அரசு நிதி உதவி செய்து வருகிறது. இலங்கையின் வளர்ச்சிக்கு நீண்டகாலமாக நண்பனாக இருந்து உதவி செய்து வரும் இந்திய அரசாங்கம் அதன் சலுகைக் கடன்கள் மற்றும் மானியத் திட்டங்களின் கீழ் இலங்கையில் பல திட்டங்களை நிறைவேற்ற உதவியிருக்கிறது. இவ்வாறு நிதியுதவி செய்யும் போது இந்தியா இலங்கை நேரடி ரயில்பாதை திட்டத்தையும் வெளியுறவு கொள்கையின் கீழ் உள்ள திட்டமாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு சர்வே இந்த பட்ஜெட்டில் இது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாது மிகவும் ஏமாற்றமாக உள்ளது.

மண்டல வாரியாக அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டம் சர்வேக்கள்.

மத்திய ரயில்வே – 63 சர்வேக்கள்
கிழக்கு ரயில்வே – 32 சர்வேக்கள்
வடக்கு ரயில்வே – 63 சர்வேக்கள்
வடக்குகிழக்கு ரயில்வே – 36 சர்வேக்கள்
வடகிழக்கு எல்லைபுற ரயில்வே -55 சர்வேக்கள்
தெற்கு ரயில்வே – 25 சர்வேக்கள்
தெற்கு மத்திய ரயில்வே – 93 சர்வேக்கள்
தெற்கு கிழக்கு ரயில்வே – 84 சர்வேக்கள்
மேற்கு ரயில்வே – 76 சர்வேக்கள்
மெட்ரோ ரயில்வே – 7 சர்வேக்கள்
கிழக்கு மத்திய ரயில்வே- 91 சர்வேக்கள்
கிழக்கு கடற்கரை ரயில்வே -59 சர்வேக்கள்
வடக்கு மத்திய ரயில்வே – 40 சர்வேக்கள்
வடக்கு மேற்கு ரயில்வே – 39 சர்வேக்கள்
தென்கிழக்குமத்திய ரயில்வே – 63 சர்வேக்கள்
தென்மேற்கு ரயில்வே – 45 சர்வேக்கள்
மேற்கு மத்திய ரயில்வே- 25 சர்வேக்கள்
அகில இந்திய அளவில் உள்ள 17 இரயில்வே மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டதில் மிககுறைந்த அளவில் தெற்கு ரயில்வே மண்டலத்துக்குதான் 25 சர்வேக்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. கொல்கொத்தாவில் உள்ள மெட்ரோ ஒரு ரயில்வே மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் சென்னை மெட்ரோ போன்று இதன் தூரம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆகையால் இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments